சிறுத்தை காலைப் பிடித்து இழுத்து இம்சை.. பேஸ்புக்கில் போட்டோ வெளியிட்ட இளைஞர் கைது!
ஹைதராபாத்: ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் சிறுத்தையை இம்சித்து, அதைப் புகைப்படமாக பேஸ்புக்கில் பதிவு செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ளது நேரு உயிரியல் பூங்கா. இங்கு சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த வாரம் அரீஃப் தாஹா மேதி (26 ) என்ற இளைஞர் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அங்கு கூண்டில் அடைக்கப் பட்டிருந்த சிறுத்தை ஒன்றின் அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார் மேதி. ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பூங்கா ஊழியருக்கு லஞ்சம் அளித்து சிறுத்தை இருக்கும் தடுப்புக்குள் சென்றுள்ளார் மேதி.
சிறுத்தையின் கூண்டுக்கு மிக அருகில் சென்ற மேதி, அதன் காலை பிடித்து இழுத்து துன்புறுத்தியுள்ளார். இதனை புகைப்படங்களாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவு செய்தார்.
பேஸ்புக்கில் பரவிய இந்த புகைப்படங்கள் தொடர்பாக தகவல் அறிந்த பூங்கா ஊழியர் பகதுர்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து மேதியின் பேஸ்புக் பக்கத்தை கண்காணித்த ஹைதராபாத் போலீஸார், இது தொடர்பாக அவரைக் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது, விலங்கை சீண்டியது என இரு வேறு பிரிவுகளில் மேதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸாரின் விசாரணையில், "நான் டிஸ்கவரி சானலின் தீவிர ரசிகன். அந்த ஆர்வத்தில் விலங்குகளுடன் நெருக்கமாக பழக முயற்சி செய்வேன். அப்படித்தான் சிறுத்தையிடம் சென்றேன். படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்தால் அதிக விருப்பங்களை பெறலாம் என்றே அப்படி செய்தேன்" என மேதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே உயிரியல் பூங்காவில், ஆமையின் மீது ஏறி நின்றவாறு எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த இளைஞரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.