போலீஸ் அடி தாங்க முடியல... செல்பி வீடியோ வெளியிட்டுவிட்டு இளைஞர் தற்கொலை
போலீஸ் அடி தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் இளைஞரின் செல்பி வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த பத்லவாத் ராஜு என்ற இளைஞர் போலீஸ் அடி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்வதற்கு முன்பு செல்பி வீடியோ எடுத்திருக்கிறார்.
இந்த செல்பி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதில் அவர் போலீசால் பட்ட கஷ்டங்களை பற்றி கூறியிருக்கிறார்.
இந்த பிரச்சனை தற்போது ஹைதராபாத் காவல்துறைக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இது குறித்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவி சண்டை
கடந்த நவம்பர் 11ம் தேதி ஹைதராபாத் போலீசால் பத்லவாத் ராஜு என்ற 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். ராஜு அவர் மனைவியை அடிக்கடி துன்புறுத்துவதாக அவரின் மாமனார் போலீசில் புகார் அளித்து இருந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஜு போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டு இரவு முழுக்க விசாரிக்கப்பட்டார். மேலும் போலீசார் அவரை மோசமாக தாக்கி இருக்கின்றனர்.
ராஜு தற்கொலை செய்தார்
நவம்பர் 12ம் தேதி ராஜுவின் மாமனார் தாமாக வந்து அவர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினார். இதையடுத்து ராஜு போலீசால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால் வீட்டிற்கு சென்ற ராஜு அன்று இரவே விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார். பாலில் விஷம் கலந்து அவரது மனைவி தூங்கிய பின் குடித்து இருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டது மறுநாள் காலையில் தான் குடும்பத்தினருக்கு தெரிந்தது.
செல்பி வீடியோ வெளியானது
ராஜு தற்கொலை செய்து கொண்ட போது அதை தனது மொபைலில் செல்பி வீடியோவாக எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ நேற்றுதான் வெளியானது. அதில் ''போலீஸ் என்னை மிகவும் துன்புறுத்தியது . இன்னும் என்னால் சரியாக உட்காரவோ, சாப்பிடவோ முடியவில்லை. எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்'' என்று பேசி உள்ளார்.
துறை ரீதியான நடவடிக்கை
ராஜு பேசிய வீடியோ நேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. ஹைதராபாத் காவல்துறையின் மோசமான செயலை எதிர்த்து அனைவரும் சமூக வலைதளத்தில் எழுதி இருந்தனர். இதையடுத்து ஹைதராபாத் போலீஸ் கமிஷ்னர் சந்தீப் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.