டிவி லைவ் ஷோவில் விபரீதம்… தீ வைத்துக்கொண்டு கட்சி தலைவரை கட்டிப்பிடித்த தொண்டர்
லக்னௌ: உத்தரபிரதேசத்தில் டிவி நேரலை விவாத நிகழ்ச்சியின்போது, பகுஜன் சமாஜ் தொண்டர் ஒருவர் தன் மீது தீ வைத்துக் கொண்டு கொண்டு, அந்த கட்சியின் உள்ளூர் முக்கிய பிரமுகர் ஒருவரை கட்டிப்பிடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
லக்னோவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 'ஜன்மத் 2014' என்ற நேரலை விவாத நிகழ்ச்சி படமாக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரத்தில், விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
கட்சித்தலைவர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இளம் தொண்டர் ஒருவர், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டர்.
அதோடு மட்டுமல்லாது அங்கிருந்த பகுஜன் சமாஜ் தலைவர் கம்ரூசம்மா பவுஜீயை கட்டிப்பிடித்தார். தொண்டரின் இந்த செயலால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தீவைத்துக்கொண்ட தொண்டரின் பெயர் துர்கேஷ் என்று அடையாளம் தெரியவந்தது. இந்த சம்பவத்தில், துர்கேஷ் மற்றும் பகுஜன் தலைவர் பவுஜ் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இந்த சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.