அடடே ஜார்க்கண்ட் மின்சார வாரியம்... ரூ.3,800 கோடி பாக்கி என கொடுத்த ரசீதால் உரிமையாளர் 'ஷாக்'!
ஜாம்ஷெட்பூரில் சாமானியர் ஒருவரின் வீட்டிற்கு மின்சார கட்டண பாக்கியாக ரூ 3,800 கோடி என கொடுத்த ரசீதால் அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
ஜாம்ஷெட்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு ரூ 3,800 கோடி கட்டண பாக்கி என்று மின்சார வாரியம் அளித்த ரசீதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பி.ஆர் குஹா என்பவர் வீட்டிற்கு மின்சார வாரியம் ஞாயிற்றுக் கிழமை கட்டண பாக்கி ரசீது ஒன்றை அளித்துள்ளது. அதில் ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் ரூ 3,839,99,62,403 கட்ட வேண்டும் என்று அச்சிட்டு தரப்பட்டுள்ளது.
படிப்பதற்கே நமக்கு தலைசுற்றும் நிலையில் இவ்வளவு பெரிய தொகையை கட்டணமாக செலுத்தக் கோரிய ஜார்க்கண்ட மின்சார வாரியத்தின் அறிவிப்பை பார்த்து குஹா குடும்பமே ஆடிப் போய்விட்டது. மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்று பெறப்பட்ட ரசீதில் தான் கட்டணத் தொகை இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது.
தங்கள் வீட்டில் 3 அறைகள் மட்டுமே உள்ளது. அதில் 3 மின்விசிறிகள், 3 டியூப் லைட்டுகள், 1 டிவி ஆகியவை மட்டுமே உள்ளன. இவ்வாறு இருக்க, எப்படி இவ்வளவு தொகை எங்களுக்கு வந்திருக்கும் என்று குஹா அதிர்ச்சியடைந்துள்ளார்.
Man receives electricity bill of Rs. 38 bn in Jharkhand
— ANI Digital (@ani_digital) August 14, 2017
Read @ANI story | https://t.co/y21dZqSju8 pic.twitter.com/vDd0dvZMnc
இதுகுறித்து குஹாவின் மகள் ரத்னா பிஸ்வாஸ் ஜார்க்கண்ட் மாநில மின்சார வாரியத்திடம் புகார் அளித்துள்ளார். தன்னுடைய தாயார் சர்க்கரை நோயாளி என்றும், தந்தைக்கு ரத்தக் கொதிப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள குஹாவின் மகள் இந்த ரசீதை பார்த்து அவர்கள் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாகக் கூறினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரத்னா மின்சார வாரியத்திடம் புகார் அளித்துள்ளார்.