வயிற்றில் கத்தியால் கீறிய போராட்டக்காரர்.. காவிரி பந்த்தில் விபரீதம்.. தமிழர்கள் பீதி #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை எதிர்த்து பெங்களூரில் இளைஞர் ஒருவர் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார். கேஆர்எஸ் அணை அருகே 4 விவசாயிகள் தண்ணீரில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றனர்.
பெங்களூரில் மாநில தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ளது சுதந்திர பூங்கா. இங்கு காவிரி விவகாரம் குறித்து பல்வேறு அமைப்பினர் காலை முதல் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
போராட்டத்தில் பங்கேற்ற பெங்களூர் சோளூர்பாளையாவை சேர்ந்த பிரபு (30) என்ற இளைஞர், உணர்ச்சி வேகத்தில் திடீரென கத்தியால் தனது வயிற்றில் கீறிக்கொண்டார். இதனால் ரத்தம் வழிந்து ஓடியது. அதிர்ச்சியடைந்த சக போராட்டக்காரர்கள் அவரை காரில் ஏற்றி அருகேயுள்ள செயின்ட். மார்த்தாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ரத்தம் கொடுத்தாலும் கொடுப்பேன்.. தண்ணீர் விட்டுக்கொடுக்க மாட்டேன் என பிரபு கோஷமிட்டபடி மருத்துவமனைக்குள் சென்றார். இதனிடையே மண்டியா மாவட்டத்திலுள்ள கே.ஆர்.எஸ் அணை அருகே காவிரி நதியில் பாய்ந்து 4 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றனர். அதில் மூவர் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மைசூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு விவசாயியை தேடி வருகிறார்கள்.
அதே பகுதியில் மற்றொரு விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் கன்னட மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொந்தளிப்பு கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது.