இதுவல்லவோ புருஷ லட்சணம்.. மனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!
Recommended Video
டெல்லி : மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையரின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும்.
ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.
|
இது தான் காதல்
இந்த புகைப்படத்தை கோர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த நபர் தனது மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக, 6 மணி நேரம் நின்றுகொண்டே விமானத்தில் பயணித்தார். இது தான் காதல்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
இந்த புகைப்படம் டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆண் தனது மனைவி மீது வைத்திருக்கும் காதலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவல்லவோ காதல் என புகழ்ந்து தள்ளுகின்றனர்.
சுயநலவாதி மனைவி
ஆனால் சிலர் உறங்கும் அந்த பெண்ணை சுயநலவாதி என திட்டி தீர்க்கின்றனர். அவர் நினைத்திருந்தால், தனது கணவரின் தோள் மீது சாய்ந்துபடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல், தனது கணவரை நிற்க வைத்துவிட்டார் என சாடுகிறார்கள்.
|
டைட்டானிக் ரோஸ்
டைட்டானிக் படத்தில் ஜாக், ரோஸ் க்ளைமாக்ஸ் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த பெண்ணை சுயநலவாதி என குறிப்பிட்டுள்ளார் ஒருவர். இப்படி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கும் அளவுக்கு உலகம் முழுவதும் சுற்றி வருகிறது அந்த புகைப்படம்.
மனைவியின் பாசம்
பாவம் இப்படி பிளைட்டில் கூட படுத்துக் கொண்டே வரும் அளவிற்கு, அப்பெண்ணிற்கு என்ன உடல்நலப் பிரச்சினை எனத் தெரியவில்லை. மனைவிக்காக ஒரு கணவர் ஆறு மணி நேரம் நின்று கொண்டே பயணிக்கிறார் என்றால், எந்தளவுக்கு அப்பெண் தன் கணவருக்கு பாசத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சிலர் அப்பெண்ணைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.