ராம் லீலா தேர்தல் பிரச்சாரத்தில் உ.பி முதல்வர் மீது செருப்பு வீசிய வாலிபர் கைது
காஜியாபாத்: தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று மதியம் காஜியாபாத் மாவட்டத்தில் கவிநகர் பகுதியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சார மேடை ஏறிய அகிலேஷ் யாதவ் மீது. திடீரென கூட்டத்தில் இருந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் செருப்பை தூக்கி வீசினார். ஆனால், அந்த செருப்பு அகிலேஷ் மீது படாமல் மேடை அருகே பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் விழுந்தது.
இந்தத் திடீர் தாக்குதலில் முதலில் அதிர்ச்சிய்டைந்த போலீசார், பின்னர் சுதாரித்துக் கொண்டு செருப்பு வீசிய வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப் பட்ட விசாரணையில், ‘தனது நிலத்தை அரசு சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த செயலில் அந்த வாலிபர் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.