இதுதாண்டா டிஜிட்டல் இந்தியா.. பின்லேடனுக்கே ஆதார் கார்டு வாங்க முயற்சித்த பலே ஆசாமி!
கொல்லப்பட்ட அல் காய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு ஆதார் கார்டு தயாரிக்க முயன்றதாக ஒருவர் போலீஸாரிடம் பிடிபட்டார்.
ஜெய்ப்பூர்: அல்- காய்தா தீவிரவாதி ஒசாமா பின் லேடனுக்கு ஆதார் கார்டு தயாரிக்க முயற்சித்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார்.
பின் லேடன் கடந்த மே 1, 2011 அன்று பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க கடற்படையினரால் அதிரடியாக கொல்லப்பட்டார். அவரது உடலை கடலில் வீசி விட்டது அமெரிக்கா.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதாம் மன்சூரி (35) என்பவர் பின்லேடன் பெயரில் ஆதார் கார்டை தயாரிக்க முயன்று சிக்கியுள்ளார். மன்சூரி பில்வாரா நகரத்தில் ஆதார் பதிவு மையத்தை நடத்தி வருகிறார்.
இவர் ஒசாமா பின் லேடன், அபோதாபாத், பில்வாரா மாவட்டம் என்ற முகவரியை குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆதார் கார்டை தயாரித்துள்ளார். அதில் பின்லேடனின் கைரேகைகளை பதிவேற்றம் செய்யவில்லை. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த சஞ்சய் அலுடியா கூறுகையில், மன்சூரியின் இத்தகைய செயல்பாடுகளை டெல்லியைச் சேர்ந்த எங்கள் சைபர் கிரைம் பிரிவு கவனித்து வந்தது. சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில சைபர் கிரைம் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மன்சூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்த தீவிரவாதிக்கு ஆதார் கார்டு தயாரிக்க முற்பட்டது குறித்து மன்சூரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.