டெல்லி ஜும்மா மசூதி இமாம் புஹாரியை தீவைத்து எரித்துக் கொல்ல முயற்சி... இளைஞர் கைது!
டெல்லி: டெல்லியில் அமைந்துள்ள பிரபலமான ஜும்மா மசூதி இமாம், சையத் அகமது புஹாரியை தீவைத்து எரித்துக் கொல்ல ஒரு நபர் முயன்றதால் பெரும் பரபப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை தொழுகையி்ன்போது இந்த திடீர் சம்பவம் நடந்து விட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக புஹாரியை அந்த நபரிடமிருந்து அவரது பாதுகாவலர்கள் காப்பாற்றி விட்டனர். இல்லாவிட்டால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்.
இந்த பயங்கரச் செயலில் ஈடுபட்ட நபரின் பெயர் கமாலுதீன். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். 32 வயதுடைய இவர் மன நலம் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி சட்டம் - ஒழுங்கு சிறப்பு கமிஷனர் தீபக் மிஸ்ரா கூறுகையில், அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டதாகவும், அவர் மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலைத் தொழுகையை இமாம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி திடீரென ஒரு நபர் வேகமாக ஓடி வந்தார். அவரது கையில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது. அதை புஹாரி மீது ஊற்றி தீவைக்க முயன்றார் அவர்.
அதற்குள் புஹாரியின் அருகில் இருந்த அவரது பாதுகாவலர்கள், அவரை தடுத்து, பிடித்து தடுத்து விட்டனர். பின்னர் அந்த நபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள கமாலூதீன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். மனநலம் பாதிக்கப்பட்டவராக கருதப்படும் இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தான் இமாமை தாக்குவதற்காகவே டெல்லிக்கு வந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஜும்மா மசூதி இமாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் பரபரப்பு நிலவுகிறது.