ஸாரிங்க, தெரியாம பண்ணிட்டேன்... கெஜ்ரிவால் மீது மை வீசியவர் மனம் மாறி ஆம் ஆத்மியில் சேர்ந்தார்
டெல்லி: கெஜ்ரிவால் மீது மை வீசிய பாஜகவைச் சேர்ந்த மனிதர் மனம் மாறி தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நச்சிகேட்டா வால்நேக்கர். பா.ஜ.கவை சேர்ந்த இவர், கடந்தாண்டு நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு தாக்குதல் நடத்தினார்.
ஆனால், சமீபத்தில் வால்நேக்கர் மனம் மாறி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். தனது திடீர் மனமாற்றம் குறித்து திரில்கோபூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வால்நேக்கர் கூறியதாவது:-
நான் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க கட்சியில் தீவிர உறுப்பினராக இருந்து வந்தேன். எந்தவகையிலாவது இந்த நாட்டுக்கு என்னால் முடிந்த வகையில் சேவையாற்ற வேண்டும் என்று விரும்பினேன்.
ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற உறுதியான குறிக்கோளுடன் தான் நான் பா.ஜ.கவில் இணைந்தேன். ஆனால் பா.ஜ.கவால் அவ்வாறு செய்யமுடியாது என்று பின்னர்தான் உணர்ந்து கொண்டேன். மை வீசியதற்காக கெஜ்ரிவால் என்னை மன்னித்த போதுதான் நான் என் தவறை உணர்ந்தேன்.
கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது நான் மிகவும் வருந்தினேன். அதைப்பார்த்த என் தாயார் நீ தற்போது இருக்கும் கட்சி உனது கொள்கைகளுக்கு ஏற்றதல்ல என்று கூறினார்.
அதன் பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து என்னை மன்னிக்கும்படியும் என்னை அவரது கட்சியில் சேர்த்து நல்வழிபடுத்தும் படியும் கேட்டுக்கொண்டேன். என்னை அவர் மன்னித்து அவரது கட்சியில் இணைத்துக்கொண்டார்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கெஜ்ரிவாலை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என பாஜகவினர் விமர்சிப்பதற்கு வால்நேக்கர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.