சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை: குவியும் பக்தர்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன்கோவில் மண்டலபூஜை நாளை நடைபெறுவதை ஒட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோவில் வருவாய் ரூ.120 கோடியை தாண்டியுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 41 நாட்களான மண்டல பூஜை காலம் நாளை நிறைவடைகிறது.
முக்கிய நிகழ்வான ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு நடைபெறும் சிறப்பு வாய்ந்த பூஜை நாளை நடக்கிறது. இதை காண சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தங்க அங்கி ஊர்வலம்
மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக ஆரன்முளாவில் இருந்து டிசம்பர் 22ம் தேதி ஏற்கனவே புறப்பட்டு விட்டது. அது சபரிமலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை கோயிலை அடையும்.
ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி 426 பவுன் எடை கொண்டது. இந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
மண்டலபூஜை
தங்க அங்கி வந்த பிறகு அவை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும். நாளை மாலை நடக்கும் மண்டல பூஜைக்கு பின்னர் இரவில் கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மகர விளக்கு கால பூஜைக்காக வரும் டிசம்பர் 30ம் தேதி மாலை கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்
இந்நிலையில் கடந்த வருடங்களை விட இந்த வருடம் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவில் வருமானமும் அதிகரித்துள்ளது.
ரூ. 120 கோடி
23ம் தேதி வரை கோயில் வருமானம் ரூ.120.40 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.20 கோடி அதிகமாகும். அரவணை பிரசாதம் மூலம் ரூ.47 கோடியும், உண்டியல் மூலம் ரூ.44 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.9 கோடியும் கிடைத்துள்ளது. மகர விளக்கு கால நேரங்களில் இந்த தொகை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது