மண்டியா மாவட்டத்தில்தான் வறட்சி அதிகமாம்.. இப்படி அறிக்கையளித்தால் எப்படி காவிரி தமிழகம் வரும்?
டெல்லி: காவிரி தொழில்நுட்ப குழு சுப்ரீம் கோர்ட்டில் அளித்த அறிக்கையில், தமிழகத்திற்கு எதிரான அம்சங்களே அதிகமாக இடம் பெற்றுள்ளன.
கர்நாடகா மற்றும் தமிழகத்திலுள்ள காவிரி பாசன பகுதிகளில் நீர் இருப்பு மற்றும் நீர் தேவையை ஆய்வு செய்ய, மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ்.ஷா தலைமையில், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதில்,தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றனர்.
இரு மாநிலங்களிலும் இக்குழு ஆய்வு செய்து, சுப்ரீம்கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை நகல், இரு மாநில வழக்கறிஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே நாளை காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது இரு மாநிலங்களும் வாதம் முன் வைக்கப்போகின்றன.
இதில் இரு மாநிலங்களிலுமே வறட்சி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கு மாற்றாக, தமிழகம் புதிதாக ஏரி, குளங்களை வெட்டிக்கொள்ளலாம் என பரிந்துரை செய்து, விஷயத்தின் உடனடி வீரியம் தெரியாமல் அறிக்கை கொடுத்துள்ளதாக நிபுணர் குழு மீது தமிழக விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நிபுணர் குழு அறிக்கையில் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ள அம்சங்களை பாருங்கள்..: கர்நாடகாவில், காவிரி பாசன பகுதியில் உள்ள 48 தாலுகாக்களில் 42 தாலுகாக்களை அம்மாநில அரசு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்துள்ளது. அந்த அளவு அங்கு வறட்சி தாண்டவமாடுகிறது.
இரு மாநிலங்களிலும் வறட்சி அதிகமாக உள்ளது. அதிலும், கர்நாடகாவின் மண்டியா மாவட்டம்தான் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில்தான் விவசாயிகள் அதிக அளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.