வாஜ்பாய் அமல்படுத்தவிருந்த நதிகள் இணைப்புத் திட்டத்தை நான்தான் தடுத்தேன்: மேனகா காந்தி
பிலிபிட்: நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய் செயல்படுத்த முற்பட்டார்; அதை நான்தான் தடுத்துவிட்டேன் என்று, பா.ஜ.க - எம்.பி., மேனகா காந்தி கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், ஆன்லா லோக்சபா தொகுதி எம்.பி.,யான மேனகா காந்தி, திங்கட்கிழமை முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது, கோம்தி மற்றும் சாரதா நதிகளை இணைப்பது தொடர்பாக, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மேனகா கூறியதாவது:
நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டத்தை, வாஜ்பாய் அரசு செயல்படுத்த விடாமல் தடுத்தது நானே.
குப்பையான திட்டம்
இத்தகைய திட்டங்கள் குப்பையானவை. இதுபோன்ற மோசமான திட்டம் உலகில் வேறு எங்கும் இல்லை.
தனித்தனி சுற்றுச்சூழல்
ஒவ்வொரு நதியும், அதற்கென தனி சுற்றுச்சூழல் முறைகளையும், மீன் வளத்தையும் கொண்டுள்ளது.
மீன்வளம் பாதிக்கும்
ஒரு நதியை மற்றொரு நதியுடன் இணைத்தால், அந்த நதிகளின் சுற்றுச் சூழல் முறைகளும், மீன்வளமும் பாதிக்கப்படும்.
பல லட்சம் ஏக்கர் நிலங்கள்
மேலும், நதிகளை இணைப்பதால், 10 முதல், 15 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாழாகி விடும். அந்த அளவு நிலங்களை யார் கொடுப்பது? இவ்வாறு, மேனகா கூறினார்.
நதிகள் இணைப்பு கேள்விக்குறி?
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசும் போதெல்லாம், நாட்டில் வறட்சியையும், வெள்ளத்தையும் தடுக்க, நதிகளை இணைப்பது அவசியம் என, பேசினார். அப்படிப்பட்ட நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்த மேனகா, நதிகள் இணைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.