ஆண்களால்தான் அத்தனை வன்முறையும்.... மேனகா காந்தி பேச்சால் பெரும் சர்ச்சை
டெல்லி: நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைச் சம்பவங்களிலும் ஆண்களின் பங்கு இன்றியமையாத இருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியின் பேச்சுக்கு சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்களது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய 100 பெண்களை நாடெங்கிலும் தேர்ந்தெடுத்து அவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சகத்தின் பேஸ்புக் பக்கத்தில் இணையவாசிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மேனகா காந்தி, "நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் ஆண்களே காரணமாக இருக்கின்றனர்.
இதனைத் தடுக்க பாலின சமநிலையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை ஆரம்பிக்க வேண்டும். பெண்களை மதிக்கும் ஆண் பிள்ளைகளை நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
மன்னிப்பு கோர வேண்டும்...
இந்நிலையில், மேனகா காந்தி ஆண்கள் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன் அமைப்பு கோரியுள்ளது. அப்படியானால், பெண்கள் செய்யும் வன்முறை ஏற்றுக் கொள்ளக் கூடியது என மேனகாகாந்தி கூறுகிறாரா எனவும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஆண்கள் தற்கொலை...
மேலும், பெண்களின் கொடுமை தாங்காமல் 8 நிமிடங்களுக்கு ஒரு ஆண் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேனகாகாந்தி இவ்வாறு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திராணி விவகாரம்...
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபகாலமாக பெண்களின் கொடூர நடவடிக்கைகள் அதிகரிப்பதை நாம் காண முடிகிறது. இந்திராணி முகர்ஜி தன் சொந்த மகளையே கொலை செய்துள்ளார். இதே போல் புனேயில் ராக்கி தனது மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். அஜய் நிகம் தனது மனைவி அமிதா நிகமால் கொல்லப்பட்டுள்ளார்.
விருது...
இந்நிலையில், மேனகாகாந்தி தனது இத்தகைய பேச்சால் இது போன்ற பெண்களுக்கு விருது தருகிறார். மேனகாகாந்தியின் இந்தப் பேச்சு பெண்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை எனக் கூறுவது போல் உள்ளது.
பெண்களின் வன்முறை...
8 நிமிடங்களுக்கு ஒரு ஆண், பெண்களின் வன்முறையால் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஆண்களின் தற்கொலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில், மேனகாகாந்தியின் இந்தப் பேச்சு ஏற்கக் கூடியதல்ல.
ஆண்களின் வெறுப்பு...
மேனகாகாந்தி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கலாம். ஆனால், அதற்கு காரணம் மக்கள் தான். ஆண், பெண் என்ற பேதமின்றி மக்கள் அளித்த வாக்குகளாலேயே அவர் அமைச்சர் பதவியை அடைந்துள்ளார். ஆனால், தற்போது மேனகாகாந்தியின் இந்த ஆண்களுக்கு எதிரான பேச்சால், எதிர்காலத்தில் ஆண்கள் அவர்களுக்கு வாக்களிக்க யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரேணுகா சவுத்ரி...
சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரியும் இதே தவறை தான் செய்தார். அவர், ‘இது ஆண்கள் கஷ்டப்படும் காலம்' எனத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். ரேணுகாவின் இந்தப் பேச்சுக்கு அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டினார்கள். அடுத்த வந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இதனால், அவரது அரசியல் வாழ்வே அஸ்தமித்துப் போனது.
பெண் குற்றவாளிகள்...
ஆனால், ரேணுகா சவுத்ரியைப் பார்த்தும் மேனகா காந்தி பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் அதே தவறை அவர் செய்துள்ளார். குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் தனிப்பட்ட பாலினம் இல்லை. இதனால், ஆண்கள் மட்டுமே வன்முறைக்குக் காரணம் எனக் கூறுவது பெண் குற்றவாளிகளைக் காக்கும் செயல் போல் உள்ளது" என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் தான் கெட்டவர்களா?
மேலும், இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜோதி திவாரி கூறுகையில், "இதன் மூலம் பெண்கள் ஆண்களைக் கொல்லுவது சரியென மேனகா காந்தி அனுமதி அளிக்கப் பார்க்கிறார். பெண்களை மதிக்கும் ஆண்களுக்கு பரிசு வழங்கப்படும் என மேனகாகாந்தி கூறுவதன் மூலம், ஆண்களை தாக்கும் பெண்களுக்கும் பரிசு என அவர் மறைமுகமாகக் கூறுகிறாரா. இவர் கூறுவதைப் பார்த்தால் ஆண்கள் மட்டும் தான் கெட்டவர்கள் என்றும், பெண்கள் அனைவரும் புனிதர்கள் என்றும் கூறுவது போல் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.