பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் திட்டமில்லை: மேனகா காந்தி
டெல்லி: பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் திட்டம் எதுவுமில்லை என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று நாடு முழுதும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு வருகின்றன. பாலியல் தொழில் செய்வோர் சார்ந்த சில அமைப்புகள் இந்தத் தொழிலை சட்டபூர்வமான குற்றமாக அணுகக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
பெண்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் வலுக்கட்டாய திணிப்புகளும், எச்.ஐ.வி. போன்ற நோய்களும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய மகளிர் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
"மகளிர் நலத்திட்டங்களில் பொருந்தக்கூடிய பிரிவுகளில் பாலியல் தொழிலாளர்களும் நன்மை பெற முடியும். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.
ஆனாலும் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக பெண்களைப் புகுத்தும் குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
மேலும் பாலியல் தொழிலாளர்களுகான மறுவாழ்வு மற்றும் சேமநலம் குறித்த திட்டங்கள் குறித்தும் தனது எழுத்துப்பூர்வ விளக்கத்தில் அவர் விவரித்துள்ளார். அதில், இது தொடர்பாக 'உஜ்ஜாவலா' என்ற திட்டம் இருப்பதாகவும், இது வலுக்கட்டாய பாலியல் தொழில் திணிக்கப்படும் பெண்களை காப்பாற்றவும், மீட்டு மீண்டும் மறுவாழ்வு அளிக்கச்செய்யும் திட்டம் எனத் தெரிவித்துள்ளார். இத்திட்டம் 2007ஆம் ஆண்டு முதலே இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.