பள்ளி கேன்டீன்களில் ஜங்க்ஃபுட் விற்கத் தடை: மேனகா காந்தி அறிவுறுத்தல்
டெல்லி: நாடுமுழுவதும் உள்ள பள்ளி கேண்டீன்களில் ஜங்க் ஃபுட்களை விற்பனை செய்ய மத்திய அமைச்சர் மேனகா காந்தி தடை விதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இது குறித்து மத்திய மனிதவளமேம்பாடு, சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும் திட்டம் மனிதவளமேம்பாட்டுத்துறையின் கீழ் வருகிறது. இது குறித்து பாதுகாப்பான உணவு வழங்குவது குறித்து சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.
ஏற்கனவே உதய் பவுன்டேசன் என்ற என்ஜிஓ அமைப்பு பள்ளிக் குழந்தைகளின் மாறிவரும் உணவுப்பழக்கத்தை குறித்தும் கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பீட்ஸா, பர்க்கர் உள்ளிட்ட ஜங்க் ஃபுட் உணவுவகைகளை தடை செய்யவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனினும் நடப்பு கல்வியாண்டு முதலே மாணவர்களின் உடல் நலன் கருதி, பள்ளி கேன்டீன்களில் சத்தான உணவுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளதாக அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் ஃபுட்' அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, கடந்த ஆண்டே மன்மோகன்சிங் அரசு ஆலோசனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.