ஹரம்பி எபஃக்ட்.. இந்தியா முழுக்க மிருக காட்சி சாலைகளை மூட வேண்டும்: மேனகா காந்தி
டெல்லி: நாடு முழுவதும் உள்ள மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கூறி உள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தனது துறை பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து சமூக ஊடகத்தில் மேனகா காந்தி ஆன்லைன் மூலம் கலந்துரையாடினார்.
அப்போது, 4 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக, அமெரிக்காவில் ஹரம்பி என்ற கொரில்லா குரங்கு, மிருக காட்சி சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும் கேள்வி வந்தது.
அதற்கு பதிலளித்த மேனகா காந்தி, நான் மிருககாட்சி சாலைகளுக்கு முற்றிலும் எதிரானவர். இயற்கைக்கு மாறாக மிருகங்களை கூண்டுகளில் காட்சிப் பொருளாக அடைத்து வைத்து உள்ள நிலை நீடிக்கக் கூடாது. நாடு முழுவதும் உள்ள மிருகக்காட்சி சாலைகளை மூடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பசுவதைக்கு முடிவு கட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.