யார் பாதை தவறி விட்டார்கள் என நாடு பதில் சொல்லும்... பிரியங்காவுக்கு மேனகா பதிலடி
சுல்தான்பூர்: யார் சரியான பாதையில் இருந்து தவறி விட்டார்கள் என நாடு பதில் சொல்லும் என வருண்காந்தி குறித்தான பிரியங்கா கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் வருணின் தாயாரும், பாஜக தலைவருமான மேனகாகாந்தி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகோதரர் சஞ்சய்காந்தியின் மனைவியான மேனகாகாந்தி, காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று பாஜகவில் அங்கம் வகித்து வருகிறார். அவரது மகன் வருண்காந்தி பாஜக சார்பில் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று உத்திரப்பிரதேசம் அமேதி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. அப்போது அவருடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்புமனுதாக்கலுக்கு பின் பிரியங்கா, முன்ஷிகங் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பிரியங்கா தனது மற்றொரு சகோதரர் வருண் காந்தி பற்றி பேசினார். அப்போது, ‘பாரதீய ஜனதாவில் இணைந்து தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் வருண். உங்களின் ஓட்டுக்கள் மூலம் வருணுக்கு சரியான பாடம் கற்று தர வேண்டும்; அவருக்கு அன்பு மற்றும் ஒற்றுமையின் மொழியை கற்றுத் தர வேண்டும்' எனக் கூறினார்.
தன் மகன் குறித்த பிரியங்கா பேச்சுக்கு இன்று பதில் அளித்துள்ளார் வருணின் தாயார் மேனகாகாந்தி. அதில், ‘யார் சரியான பாதையில் இருந்து தவறிவிட்டார்கள் என நாடு பதில் சொல்லும்' என அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவும் பிரியங்காவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.