வன விலங்குகளை கொல்ல மத்திய அரசு அனுமதி: மேனகா - ஜவடேகர் இடையே மோதல்
டெல்லி: பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளைக் கொல்வதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கிய விவகாரத்தில், அத்துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளை கொல்ல பிரகாஷ் ஜவடேகர் தமைமையிலான சுற்றுச் சூழல் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும், விலங்குகளை கொல்ல அனுமதி அளித்து முதல்முறையாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது, அதற்கான காரணம் தெரியவில்லை, என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் "நீல்கய்' மான்கள் கொல்லப்பட்டது, மிகப்பெரிய படுகொலைச் சம்பவமாகும். வனவிலங்குகளைக் கொல்ல மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பீகாரில் "நீல்கய்', மேற்கு வங்கத்தில் யானைகள், ஹிமாசலப் பிரதேசத்தில் குரங்குகள், கோவாவில் மயில்கள், மகாராஷ்டிர மாநிலம், சந்திராபூரில் காட்டுப் பன்றிகள் ஆகிய வனவிலங்குகளைக் கொல்ல சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
பீகாரைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட கிராமத்தின் தலைவரோ, விவசாயிகளோ கூட "நீல்கய்' மான்களை கொல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. சந்திராபூரில் இதுவரை 53 காட்டுப் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் 50 காட்டுப் பன்றிகளை கொல்வதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது என்றார் மேனகா காந்தி.
இந்நிலையில், மேனகா காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
வனவிலங்குகளால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதாகவும், பயிர்கள் நாசமாவதாகவும் கூறி, அவற்றை கொல்வதற்கு மாநில அரசுகள் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரின. அதன் அடிப்படையில்தான், குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு வனவிலங்குகளைக் கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், மாநில அரசுகளின் பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுவதற்காக அறிவியல்பூர்வமாக கையாளப்படும் முறையும் அதுதான். தற்போதுள்ள சட்டத்தின்படியே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே தவிர, அதுவொன்றும் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டமல்ல என விளக்கம் அளித்துள்ளார்.