மங்களூரில் முஸ்லிம் வாலிபர் தாக்கப்பட்ட வழக்கில் திருப்பம்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் இந்து பெண்ணுடன் இஸ்லாமிய வாலிபர் பேசிக்கொண்டிருந்ததற்காக அந்த வாலிபரை இந்து ஆண்கள் சேர்ந்து அடித்து கம்பத்தில் கட்டி வைத்ததாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி பொய் என்று கூறியுள்ள பாதிக்கப்பட்ட பெண், சூப்பர் மார்க்கெட்டில் தன்னுடன் வேலை பார்க்கும் அந்த வாலிபர் தன்னை பலாத்காரம் செய்வதற்காக காரில் கடத்த முற்பட்டபோது பொதுமக்கள் தடுத்து தன்னை காப்பாற்றியதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
மங்களூரை சேர்ந்த ஷகிர் என்ற 28 வயது வாலிபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களிலும், பல ஊடகங்களிலும் வெளியானது. இந்து பெண் ஒருவருடன் தெருவில் பேசியதற்காக அவர் அடிக்கப்பட்டார் என்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. புகாரில் அவர் கூறியுள்ளதாவது: நானும், ஷகிரும், ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறோம்.
ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் கிடைத்த பழக்கத்தை தவறாக பயன்படுத்தி, கடந்த பல மாதங்களாக, எனது செல்போனுக்கு மோசமான எஸ்எம்எஸ்களை ஷகிர் அனுப்பி வந்தார். இரு முறை என்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். நான் தப்பிவிட்டேன். சம்பவத்தன்று தனது காரை கொண்டு வந்து நிறுத்தி, என்னை உள்ளே பிடித்து தள்ளி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
நான் கூச்சல் போட்டதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து, ஷகிரை கட்டி வைத்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஷகிர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது புகாரில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும் தனது செல்போனுக்கு ஷகிர் அனுப்பிய எஸ்எம்எஸ்களையும் போலீசாரிடம் ஆதாரமாக காண்பித்துள்ளார் அந்த பெண். இந்த புகாரை தொடர்ந்து, மதரீதியாக உருவான இப்பிரச்சினை, தற்போது அடங்கியுள்ளது.