பெங்களூர் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் மங்களூரில் 'பதுங்கலா'? தீவிர தேடுதல்!!
மங்களூரு: குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதிகள் யார் என்று விசாரணை நடத்தி வரும் பெங்களூரு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் 'மங்களூரு' நகரையும் 'இலக்கு' வைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு சர்ச் சாலை குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச சிறையில் இருந்து தப்பிய 5 சிமி தீவிரவாதிகள் அல்லது அல் உம்மா இயக்கத்தினர் இந்த சதியில் ஈடுபட்டனரா என்பதை கண்டுபிடிக்க மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டுக்கு பெங்களூர் போலீசாரின் தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கர்நாடகாவின் மங்களூரு நகரிலும் மும்முரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏனெனில் இந்த நகரம்தான் அல் உம்மா மற்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக பல ஆண்டுகாலம் இருந்து வருகிறது.
1998ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட போது அல் உம்மா இயக்கத்தினர் 4 பேர் மங்களூருவில் சேலை வியாபாரிகள் போல பதுங்கியிருந்தனர். உல்லல் பிரிட்ஜ் என்ற பகுதியில் வீட்டை வாடகைக்கு தங்கியிருந்த அவர்களை போலீசார் நெருங்கிய போது நால்வரும் தப்பினர்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் ரியாஸ் பட்கலுக்கும் மங்களூருதான் புகலிடம். இங்கே அவன் பதுங்கியிருந்த போது பல முறை போலீசார் நெருங்கிய நிலையில் எளிதாக தப்பிச் செல்லும் அளவுக்கு பாதுகாப்பான இடமாக மங்களூர் நகரம் இருந்தது. இதேபோல் கடந்த ஆண்டு யாசின் பட்கல் கைது செய்யப்படும் வரை மங்களூரில்தான் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் தெஹ்சீன் மற்றும் ரஹ்மான் ஆகியோர் பதுங்கியிருந்தனர்.
மங்களூரு நகரைப் பொறுத்தவரையில் சாலை, ரயில், கடல் என அனைத்து மார்க்கங்களிலும் அணுகக் கூடிய இடம் என்பதால்தான் தீவிரவாதிகள் பாதுகாப்பாக பதுங்கும் இடமாக இருக்கிறது. அதே நேரத்தில் மங்களூரு நகரத்தில் இவர்கள் எந்த ஒரு தாக்குதலையும் நடத்துவதும் இல்லை. மேலும் இவர்களுக்கான ஆயுதங்களை கடல்வழியே கொண்டுவருவதும் இங்கு தீவிரவாதிகளுக்கு எளிதாக இருப்பதாக கருதப்படுகிறதாம்.
பெங்களூரு குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே மங்களூரு நகர போலீசார் பாதுகாப்பை அதிகரித்திருக்கின்றனர். பெங்களூரில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு மங்களூரில் தீவிரவாதிகள் பதுங்கிவிடக் கூடாது என்பதற்காக தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போதும் மங்களூரு நகரில் பெங்களூர் சதிகாரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என்ற தேடுதல் நடவடிக்கை படு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.