செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்.. புதிய வரலாறு படைத்த இந்தியா!
பெங்களூர்: மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. புதிய சகாப்தத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் நுழைந்ததை உறுதிப்படுத்தும் செய்தி இஸ்ரோவை வந்தடைந்தது.
திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து மங்கள்யான் செவ்வாயின் நிழலை எட்டிப் பிடித்துள்ளது இந்திய மக்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை நாலே கால் மணியிலிருந்து மங்கள்யானை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் செலுத்தும் பணிகள் பெங்களூர் அருகே உள்ள புவிக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடங்கின.
காலை ஏழேகால் மணியளவில் விண்கலத்தின் அனைத்து என்ஜின்களும் வெற்றிகரமாக இயக்கப்பட்டன. இந்த வேலைகள் எழே முக்கால் மணியளவில் முடிவடைந்து வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான். இது எட்டு மணியளவில் உறுதிப்படுத்தப்பட்டது.
உறுதிப்படுத்தும் செய்தி வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்தில் கைதட்டிட வரவேற்று மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை பிரதமர் மோடி நேரில் பார்த்து மகிழ்ந்தார்.
முதல் ஆசிய நாடு
செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது. மேலும் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழைந்த 4வது நாடும் இந்தியா. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய வி்ண்வெளி அமைப்புகள் மட்டுமே செவ்வாயை எட்டிப் பிடித்தவையாகும். அந்த வரிசையில் தற்போது இந்தியா இணைந்துள்ளது.
{ventuno}
உலகின் நான்கு இடங்களில்
மங்கள்யானின் செயல்பாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்து கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் இஸ்ரோ கண்காணித்தது. மேலும் அமெரிக்காவின் நாசா அமைப்பும் மங்கள்யான் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தது என்பது குறிப்பிடத்தக்கது.