செவ்வாய் "கிரகப் பிரவேசம்" .. மங்கள்யான் தயார்... 4 விநாடி என்ஜின் சோதனை வெற்றி!
பெங்களூர்: புதன்கிழமையன்று செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நுழையவுள்ள இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தின் ராக்கெட் மோட்டார் (அதாவது வாகனத்தின் என்ஜின் போல) பரிசோதனை இன்று வெற்றிகரமாக நடந்தேறியது. இதை இன்று பிற்பகல் 2.46 மணியலவில் உறுதி செய்துள்ளது இஸ்ரோ.
சரியாக 3.968 விநாடிகளுக்கு இந்த மோட்டாரை இஸ்ரோ விஞ்ஞானிகள் இயக்கி சரி பார்த்துள்ளனர். அது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளதால், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் புதன்கிழமையன்று மங்கள்யான் பிரவேசிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நம்பப்படுகிறது.
கடந்த 10 மாதமாக செவ்வாயை நோக்கி பயணித்து வரும், மங்கள்யான், புதன்கிழமையன்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நுழையவுள்ளது.
தற்போது அதி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் மங்கள்யான், இதே வேகத்தில் போனால், அப்படியே செவ்வாயைக் கடந்து சென்று சூரியனை நோக்கிப் போய் விடும்.
வேகத்தைக் குறைக்க
எனவே செவ்வாயின் சுற்று வட்டப் பாதையைத் தாண்டி போய் விடாமல் தடுப்பதற்காக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராக்கெட் மோட்டாரை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று பரிசோதனைக்காக இயக்கிப் பார்த்தனர்.
ரிவர்ஸில் வேகம் குறைக்கப்படும்
புதன்கிழமையன்று இந்த மோட்டார் நீண்ட நேரம் இயக்கப்படும். அப்போது அதன் வேகம் ரிவர்ஸ் செய்யப்பட்டு செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படும் வரை மோட்டார் செயல்படும்.
பெரிய ராக்கெட் மோட்டாரும், 8 திரஸ்டர்களும்
கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து அது வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இந்த விண்கலத்தில் ஒரு பெரிய ராக்கெட் மோட்டாரும், எட்டு சிறிய ரக "திரஸ்டர்களும்" பொருத்தப்பட்டுள்ளன.
சொகுசான ராக்கெட் மோட்டார்
இதில் பெரிய ரக ராக்கெட் மோட்டார் சில முறை மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் இயக்கிப் பார்த்துள்ளனர். இதுதான் மங்கள்யானின் வேகத்தைக் குறைத்து அதை செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் பணியைச் செய்யப் போகிறது.
4 விநாடி சோதனை
புதன்கிழமைதான் இந்த ராக்கெட் மோட்டார் சில நிமிட நேரத்திற்கு இயக்கப்படவுள்ளது. இருப்பினும் பல மாதமாக அது செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், கடைசி நேரத்தில் சிக்கல் வந்து விடக் கூடாதே என்பதற்காக அதை இன்று 4 விநாடி நேர அளவுக்கு இயக்கிப் பார்க்க இஸ்ரோ திட்டமிட்டது.
சூப்பர் மோட்டார்
இந்த பெரிய ராக்கெட் மோட்டாரானது, கடந்த 1992ம் ஆண்டு முதல் பல்வேறு நிலைகளில் 12 முறை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அது எந்தப் பிரச்சினையுமின்றி செயல்பட்டுள்ளது.
எல்லா உத்தரவுகளும் ரெடி!
இதுகுறித்து மங்கள்யான் திட்ட கட்டுப்பாட்டாளர் ராமகிருஷ்ணா கூறுகையில், ராக்கெட் மோட்டாரில் உள்ள அனைத்து உத்தரவுகளும் சிறப்பான முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே விண்கலம் தானாகவே தனது செயல்களை திட்டமிட்டபடி செய்யும் என்றார்.
3 ஆப்ஷன்கள்!
தற்போது முன்னெச்சரிக்கையாக 3 விதமான திட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கையில் வைத்துள்ளனர். அதில் முதல் இரு திட்டங்கள்தான் முக்கியமானவை. ஒரு வேளை இந்தத் திட்டங்கள் தோல்வியில் முடிந்தால், 3வது திட்டம் கையில் எடுக்கப்படும். முதல் இரு திட்டங்கள் மூலம் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க முடியாமல் போகும்போது இந்த 3வது திட்டம்செயல்படுத்தப்படும். அதாவது விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள எட்டு சிறிய ரக திரஸ்டர்களைப் பயன்படுத்தி வேகம் குறைக்கப்படும்.
ஜம்மென்று எழுந்த "கும்பகர்ணன்"..!
மங்கள்யானின் பெரிய ரக ராக்கெட் மோட்டாருக்கு கும்பகர்ணன் என்று செல்லப் பெயர் வைத்துள்ளனர் விஞ்ஞானிகள். காரணம், இது நீண்ட தூக்கத்தில் இருப்பதால். ஆனால் இன்று இந்த கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழும்பி சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளது.
புதன்கிழமை முழு வீச்சில்
இன்று கிட்டத்தட்ட 3.698 விநாடிகளுக்கு இந்த மோட்டார் இயக்கிப் பார்க்கப்பட்டது. திரவ அபோஜி மோட்டார் என்று இதற்குப் பெயர். இதன் சக்தி 440 நியூட்டன் ஆகும். இன்றை பரிசோதனையின்போது 0.567 கிலோ எரிபொருள் செலவிடப்பட்டது. இதன் வேகம் விநாடிக்கு 2.142 மீட்டராக இருந்தது. பரிசோதனையின் முடிவு தெரிய 12 நிமிடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்க்தான்
மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் சீரான வேகத்தில் அது செவ்வாய் கிரகதத்தை சுற்றி வர ஆரம்பிக்கும். இதில் மோட்டாரை இயக்கி செயல்படுத்துவதுதான் ரிஸ்க்கான வேலை என்பதால் இஸ்ரோவில் சற்று பதட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
புதன்கிழமை பெங்களூர் வருகிறார் மோடி
இதற்கிடையே, செவ்வாய் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நுழைவதை நேரில் காண பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.