தகதகக்கும் செவ்வாய் கிரகத்தின் பரப்புகள்... மங்கள்யான் அனுப்பிய "3 டி" படத்தை வெளியிட்டது இஸ்ரோ
பெங்களூரு : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து 3 டி எனப்படும் முப்பரிமாண படங்களை அனுப்பியுள்ளது. அந்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
மங்கள்யான் விண்கலத்தால் கடந்த ஜூலை 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் காட்டும் இடம், செவ்வாய் கிரகத்தில் உள்ள வாலீஸ் மரிநேரிஸ் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான ஓஃபிர் சஸ்மா என்ற நிலப்பரப்பை படம் பிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள வாலீஸ் மரிநேரிஸ் பள்ளத்தாக்கு சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய பள்ளத்தாக்குகள் ஆகும். இந்த பள்ளத்தாக்குகளை மங்கள்யானில் இணைக்கப்பட்டுள்ள மார்ஸ் கலர் கேமரா படமெடுத்து அனுப்பியுள்ளது.
மேலும், செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1,857 கி.மீ. உயரத்தில் இருந்து இந்தப் படத்தை மங்கள்யான் படம்பிடித்துள்ளது என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யானை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. அதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.