அனைத்துக் கண்களும் செவ்வாயை நோக்கி... இன்று சுற்றுப் பாதையில் நுழைகிறது மங்கள்யான்!
பெங்களூர்: இந்தியாவின் "பட்ஜெட்" செவ்வாய் விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழைகிறது.
இதை ஒரு வரியில் எளிதாக சொல்லி விட்டோம். ஆனால் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைவது மிகப் பெரிய காரியம், எளிதான ஒன்று அல்ல. ஆனால் அந்த சோதனையில் மங்கள்யான் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய விஞ்ஞானிகள் உள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து நிலை கொள்ளும்போது பல புதிய சாதனகளையும் அது படைக்கும்.
டி 20 வெற்றி
நேற்று முன்தினம் மங்கள்யானில் உள்ள பெரிய ராக்கெட் மோட்டாரை 4 விநாடி நேரத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கிப் பரிசோதித்துப் பார்த்தனர். இதை டுவென்டி 20 போட்டியின் வெற்றியோடு ஒப்பிடலாம். இன்றைய சோதனையில் மங்கள்யான் வெற்றி பெற்றால் அதை டெஸ்ட் போட்டியின் வெற்றியோடு ஒப்பிடலாம்.
அந்த 24 நிமிடங்கள்...
நேற்று வெறும் 4 விநாடி அளவுக்குத்தான் மோட்டார் இயக்கிப் பார்க்கப்பட்டது. ஆனால் நாளை 24 நிமிடங்களுக்கு இந்த மோட்டார் தொடர்ந்து இயங்கப் போகிறது. அப்போதுதான், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த முடியும்.
புதன்கிழமை அதிகாலையில்..
இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலையில் இந்த மகத்தான சாதனை அரங்கேறப் போகிறது.
சுற்றுப் பாதைக்கு வெகு அருகே
நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.
என்ஜினில் துரு சேரவில்லை
தற்போது மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ள ராக்கெட் மோட்டாரில் திரவ எரிபொருள்தான் பயன்படுத்தப்படுகிறது. இது துருவை ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டது. இதனால்தான் கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேலாக செயல்படுத்தப்படாமல் இருந்த மோட்டார் என்ஜின் எப்படி இயங்குமோ என்ற சந்தேகம் இருந்தது. துரு பிடித்துக் கொண்டால் சிக்கலாகி விடுமே என்ற பயமும் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் விஞ்ஞானிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
ஒரு வேளை செயல்படாவிட்டால்
இனி நாளை இந்த மோட்டாரை தொடர்ந்து 24 நிமிடம் இயக்கவுள்ளனர். அப்போதுதான் தற்போது வேகமாக போய்க் கொண்டிருக்கும் மங்கள்யானின் வேகத்தை பின்னோக்கி குறைத்து படிப்படியாக சுற்றுப் பாதையில் செலுத்த முடியும். ஒரு வேளை ராக்கெட் மோட்டார் கடைசி நேரத்தில் செயல்படாமல் போனால் வேறு சில திட்டங்களையும் இஸ்ரோ கையில் வைத்துள்ளது.
திரஸ்டர்கள் மூலம்
பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய ராக்கெட் மோட்டார் செயல்படாமல் போனால், இந்த திரஸ்டர்களை இயக்கி அதன் உதவியுடன், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யானை விஞ்ஞானிகள் நிலை நிறுத்துவார்கள்.
அதில் ஒரு சின்னச் சிக்கல் இருக்கு...!
ஆனால் அதில் ஒரு சின்னச் சிக்கல் இருக்கிறது. அதாவது மிகத் துல்லியமாக மங்கள்யானை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவது கடினமாகும். எனவே ராக்கெட் மோட்டார் 100 சதவீதம் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. இல்லாவிட்டால் சரியான முறையில் நிலை நிறுத்த முடியாமல் போய், செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் சுற்றி வருவதில் நாளை குழப்பம் நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தது 423 கிலோமீட்டர் தொலைவில்
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படும்போது அதன் குறைந்தபட்ச தூரமானது செவ்வாயிலிருந்து 423 கிலோமீட்டர் உயரமாக இருக்கும். அதிகபட்ச தூரமானது 80,000 கிலோமீட்டராக இருக்கும்.
ஹாயாக இருக்க முடியாது
நேற்றைய சோதனைக்குப் பின்னர் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த சோதனை வெற்றி. அதேசமயம், நாம் ஹாயாக இருக்க முடியாது. புதன்கிழமைதான் நமக்கு மிகவும் முக்கியமானது. சரியான முறையில் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தப்படும் விநாடி வரைக்கும் நமக்கு முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அவை அனைத்தும் சரியாக நடக்க வேண்டும். அதில்தான் தற்போது அனைவரும் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
நாளை மதியம் படம் கிடைக்கும்
செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் அதில் பொருத்தப்பட்டுள்ள மார்ஸ் கலர் கேமரா (Mars Colour Camera - MCC) வேலை செய்யத் தொடங்கும். செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை நாளை பிற்பகலில் நாம் பெற முடியும்.
பூமியை படம் எடுத்து அனுப்பிய எம்சிசி
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி இந்த எம்சிசி, கேமரா பூமியை ஒரு படம் எடுத்து அனுப்பியிருந்தது. அதாவது பூமியிலிருந்து 67,000 கிலோமீட்டர் தொலைவில் அப்போது மங்கள்யான் பயணித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த கேமரா ஓய்வில் இருந்து வருகிறது.
கர்நாடகாவுக்குப் படம் வரும்
கர்நாடகவின் பயலாலு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரோவின் Indian Deep Space Network (IDSN) நிறுவன ஆய்வகத்திற்கு செவ்வாய் கிரகம் குறித்த மங்கள்யானின் புகைப்படங்கள் வந்து சேரும். அங்கிருந்து அனுப்பப்படும் தகவல்கள் பூமியை வந்தடைய 12 நிமிட நேரம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4வது நாடு
நாளை செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து விட்டால் அந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமை நமக்குக் கிடைக்கும். இதற்கு முன்பு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகியவைதான் இதை சாதித்துள்ளன.
முதல் முயற்சியிலேயே.. முதல் நாடு!
அதேபோல முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுப் பாதைக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெருமையும் மங்கள்யானுக்கு கிடைக்கும். சீனா கூட இதைச் சாதிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் நாளைய புதன்கிழமை, இந்தியாவின் செவ்வாய் கிரக பிரவேசத்திற்கான மிக முக்கியமான நாள் என்பதில் சந்தேகம் இல்லை!