‘மாங்காய்’ சண்டை... மைனர் பெண்ணை உயிரோடு எரித்த கும்பல் - உ.பியில் பயங்கரம்!
பதேஹ்பூர்: உத்திரப்பிரதேசத்தில் மாங்காய் பறிப்பது தொடர்பாக நடந்த சண்டையில் மைனர் பெண் ஒருவர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் கீஷண். இங்குள்ள விவசாயி சிவ்பூஷனின் தோட்டத்தில் மாங்காய்கள் அதிகம் காய்த்திருந்தது.
கடந்த புதனன்று இவரது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் சிலர், மாங்காய் தோட்டத்துக்குள் புகுந்து மாங்காய்களை பறித்துள்ளனர். இதற்கு சிவ்பூஷண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மாங்காய் திருடும் கும்பல் தோட்டத்தை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் நேற்று ஷிவ்பூஷனின் தோட்டத்துக்குள் மாங்காய் பறித்த கும்பல் மீண்டும் நுழைந்தது. அப்போது ஷிவபூஷண் வயலில் வேலை செய்துகொண்டிருக்க, அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த மைனர் பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கியதுடன், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து கொன்றது.
இது தொடர்பாக ஷிவ்பூஷன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நான்கு பேர் கொண்ட கும்பல் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் காரணமாக அக்கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டுள்ளனர்.