'தப்பான' மோடியை நிறுத்தியதால்தான் பீகாரில் வீழ்ந்தது பாஜக... மணிசங்கர அய்யர்
டெல்லி: பீகார் மாநில அளவிலான பாஜக தலைவர்களை முன்னிறுத்தாமல் தன்னையே முன்னிறுத்தி, ஏதோ தனக்கும், நிதீஷ் குமாருக்கும்தான் நேரடி மோதல் என்பதுபோல காட்டிக் கொண்டார் பிரதமர் மோடி. அதுவே அங்கு பாஜகவை வீழ்த்த முக்கியக் காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவு தொடர்பாக அய்யர் கூறியுள்ள கருத்து:
பீகாரில் தவறான முகத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது பாஜக. அந்தத் தவறான முகம் பிரதமர் மோ[டி. சுஷில் குமார் மோடியைத்தான் அவர்கள் முன்வைத்து தேர்தலைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் தவறான மோடியை முன்வைத்து இப்போது மண்ணைக் கவ்வியுள்ளனர்.
பிரமருக்கும், முதல்வருக்கும் மோதல்
இது பிரதமருக்கும், ஒரு முதல்வருக்கும் இடையிலான மோதலாக மாறி விட்டது. இதில் பிரதமர் வீழ்த்தப்பட்டு முதல்வர் வென்றுள்ளார். இது பிரதமருக்கு பெரும் மானக்கேடு.
தவறான முடிவு
ஒரு மாநிலத் தேர்தலில் இப்படி நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடி, உள்ளூர் தலைவர்களைத்தான் பாஜக சார்பில் பீகார் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும். ஆனால் அவரை நிதீஷை நேரடியாக எதிர்த்தார். அவருக்கும், நிதீஷுக்கும் நேரடி மோதல் போல காட்டிக் கொண்டார். இது தவறாகும்.
ராஜீவ் செய்ததையே செய்த மோடி
1987ம் ஆண்டும் இதுபோல நடந்தது. அப்போது மேற்கு வங்கத் தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜோதிபாசுவை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார் அப்போதை பிரதமர் ராஜீவ் காந்தி. அவரது பிரசாரத்தால் காங்கிரஸுக்கு 5 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. ஆனால் ஜோதிபாசு 6 சதவீத கூடுதல் வாக்குகளைத் திரட்டி வென்று விட்டார்.
சுஷில் குமாரை நிறுத்தியிருக்க வேண்டும்
இப்போது பீகாரிலும் அதுவே நடந்துள்ளது. உள்ளூர் தலைவர்களைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். ஆனால் மோடியே நேரடியாக பீகாரில் பிரசாரம் செய்தார். அவருக்கும் நி்தீஷுக்கும்தான் நேரடி மோதல் என்பதைப் போல காட்டிக் கொண்டார். உள்ளூர் தலைவர்களை அவர் மதிக்கவில்லை. அது மிகப் பெரிய தவறாகும். மாநிலத் தேர்தலில் மாநிலத் தலைவர்கள்தான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மாநில முகம்தான் முக்கியமானது. அப்படிப் பார்த்தால் சுஷில் குமார் மோடியைத்தான் பிரதானப்படுத்தியிருக்க வேண்டும் பாஜக. ஆனால் தவறான மோடியை முன்னிறுத்தி வீழ்ந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்குப் பாடம்
பீகார் தேர்தல் அத்தனை எதிர்க்கட்சிகளுக்கும் பாடமாகும். இதிலிருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும். நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். விதம் விதமான கூட்டணிகளால் பலம் கிடைக்காது. காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று இல்லை. ஆனால் ஒ்ருங்கிணைந்த கூட்டணி அவசியம் என்பதையே பீகார் தேர்தல் உணர்த்துகிறது.
காங்கிரஸ் தலைமையில்
இருப்பினும் காங்கிரஸ் நாடு முழுவதும் ஆதரவை வைத்துள்ளது. நாடு முழுவதும் தொண்டர்களை வைத்துள்ளது. நிதீஷ் குமார் அப்படி இல்லை. பீகாரைத் தாண்டி அவரால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது. இதேபோலத்தான் பல பிராந்தியக் கட்சிகள் உள்ளன. அவை அந்தந்த மாநிலத்தில் பலம் வாய்ந்தவை. அவை அனைத்தும் கை கோர்க்க வேண்டும். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் ஆதரவு வைத்துள்ளதால் அக்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்கலாம்.
விரட்டப்பட்ட மோடி - ஷா
பீகார் தேர்தல் முடிவை நான் ஏற்கனவே கணித்திருந்தேன். மோடியும், ஷாவும் விரட்டப்பட்டுள்ளனர். பீகார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விரட்டியுள்ளது என்றார் அய்யர்.