மோடி ஆட்சியை அகற்ற உதவ வேண்டும்.. பாக். சேனலுக்கு மணிசங்கர் ஐயர் பகீர் பேட்டி
டெல்லி: பாகிஸ்தானுடன் இந்தியா நெருங்கி வர வேண்டுமானால், பிரதமர் மோடியை அகற்ற பாகிஸ்தான் உதவி செய்ய வேண்டியும் என்று, அந்த நாட்டு டிவி சேனல் ஒன்றுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் அளித்துள்ள பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பாகிஸ்தான் சென்றிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர். அப்போது அந்த நாட்டு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியின்போது, இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த என்ன செய்யலாம்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பதிலளித்த ஐயர் "இதற்கு மோடியை பிரதமர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் அதிகாரத்திற்கு வர வேண்டும். அப்போதுதான், பாகிஸ்தானுடன் இந்தியா நட்புறவோடு இருக்க முடியும்" என்று கூறியதாக தெரிகிறது.
இந்த பேட்டி தற்போது வெளியே வந்துள்ளது. அண்மையில் நடந்த பாரீஸ் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த ஐயர் "மேற்கத்திய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான அச்ச உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பாரீசில் வாழும் முஸ்லிம்கள் அந்த நாட்டு குடிமக்களாக கருதப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
ஐயரின் பேச்சு, தீவிரவாதிகளின் செயல்பாட்டுக்கு, ஆதரவாக இருப்பதாக கூறி சர்ச்சை எழவே, காங்கிரஸ் சார்பில், அளித்த விளக்கத்தில், அந்த பேச்சுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், மோடி பற்றி ஐயர் கூறிய கருத்து பற்றி பாஜக கூறுகையில், ஐயர் என்ன அர்த்ததில் இதை பேசினார் என்பதை சோனியா காந்தி விளக்க வேண்டும். மணிசங்கர் ஐயரை காங்கிரஸ் பதவிகளில் இருந்து சோனியா நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.