பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்த மணிசங்கர் அய்யர் காங்கிரஸில் இருந்து சஸ்பென்ட்
பிரதமர் நரேந்திர மோடியை இழிவாக விமர்சித்த மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மேலிடத்தை மிகக் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் மேலிடத்தை முகலாய சாம்ராஜ்யங்களுடன் ஒப்பிட்டு விமர்சித்தார் மோடி.
மணிசங்கர் விமர்சனம்
இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேபோல் மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடியை விமர்சிக்கும் போது, இழிவான மனிதர் என கடுமையாக குறிப்பிட்டிருந்தார்.
மன்னிப்புக்கு உத்தரவு
மணிசங்கர் அய்யரின் இந்த நீச் ஆத்மி என்கிற வார்த்தை அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. இதற்கு மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் அதிரடி
இதையடுத்து மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரியிருந்தார். இதனிடையே மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரசியலில் பரபரப்பு
அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி குறித்த இழிவான விமர்சனத்துக்கு விளக்கம் தரக் கோரியும் மணிசங்கர் அய்யருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.