போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் அமித் ஷா விடுவிப்பு: பா.ஜ.க.வுக்கு இ. கம்யூ. கண்டனம்!
டெல்லி: சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சி.பி.ஐ. அமைப்பை அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில், தனது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. நீர்த்து போகச் செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக உண்மைகளை நீதிமன்றத்தில் சி.பி.ஐ, வேண்டுமென்றே சமர்ப்பிக்காமல் விட்டுவிட்டது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அங்கு சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற இனக் கலவரங்கள், அதனை தொடர்ந்து நிகழ்ந்த போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பாக கட்சியினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைக்க அனைத்து வழிமுறைகளையும் பாரதிய ஜனதா கட்சி கையாளுகிறது.
இதில் 2002-ல் நடந்த இனக் கலவரம் தொடர்பான நீதிபதி நானாவதி ஆணையத்தின் விசாரணை அறிக்கையும் ஒன்று. சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த பல போலீஸ் அதிகாரிகளை, குஜராத் அரசு மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. இருந்தது தெளிவாகிறது.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.