கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட... அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு... மணிப்பூரில் பரபரப்பு
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் ஒரு வாரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்களப் பணியாளர்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் 50 வயதைக் கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம்
அதன்படி மணிப்பூர் மாநிலத்தின் பிஷுன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான அங்கன்வாடி ஊழியர் ஒருவருக்குக் கடந்த பிப்பரவலி 12ஆம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அவருக்கு மூச்சு விடுவதில் திடீரென்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தார்
இதையடுத்து அவர் மொய்ராங் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனிற்றி அவர் நேற்று உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போடும்போது, சுந்தரி, தனக்கு ஒவ்வாமை பிரச்சினை இருப்பதாகத் தடுப்பூசி குழுவிடம் கூறியதாகவும் இருப்பினும் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிறப்புக் குழு
உயிரிழந்தவர் பிஷுன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி தேவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் இதற்காகச் சிறப்புக் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவறு நடந்திருந்தால் நடவடிக்கை
உயிரிழந்த சுந்தரி தேவியின் குடும்பத்தினரை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் நேரில் சந்தித்து அறுதல் கூறினார். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குப் பொருத்தமான இழப்பீடு வழங்கப்படும் என்றும் இதில் தவறு நடந்திருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ட்வீட் செய்துள்ளார்,