மணிப்பூரை தட்டி தூக்க ரெடியாகும் காங்கிரஸ்,.. புதுரூட்டை எடுக்கும் பாஜக.. எகிறும் எதிர்பார்ப்பு
மணிப்பூர் தேர்தலில் வெல்ல போவது எந்த கட்சி என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது
இம்பால்: மணிப்பூர் தேர்தலில் இந்த முறை வெல்லப்போவது பாஜகவா? காங்கிரஸ் கட்சியா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது..!
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர போகிறது..
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உபியில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது..
கோவா தேர்தல்: குடும்பம் குடும்பமாக தேர்தலில் போட்டியிட சீட்டுகளை வாரி வழங்கிய பாஜக!
முக்கிய கவனம்
இந்த 5 மாநில தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலம் முக்கிய கவனத்தை ஈர்த்து வந்தாலும், மணிப்பூர் மாநிலத்தின் தேர்தலும் மும்முரமாகி கொண்டிருக்கிறது.. இந்த மாநிலத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.. வழக்கமாக தேர்தல் என்றாலே பாஜகவும், காங்கிரசும் நேருக்கு நேர் மோதுவது வழக்கம்.. ஆனால், இந்த முறை தேசிய அரசியலை மாறுபட்டு நிற்கிறது.. உபி மாநிலத்தில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் நேரடி போட்டி நடக்கும் என்கிறார்கள்.
பஞ்சாப்
அதுபோலவே, பஞ்சாப்பில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் போட்டி என்கிறார்கள்.. மற்ற மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் மோதுகின்றன.. அந்த வகையில் மணிப்பூர் மாநில தேர்தலும் ஒன்று.. கடந்த கால தேர்தலை போலவே, இந்த முறையும் தனித்து களமிறங்கி ஆட்சியை பிடிக்க பாஜக பிளான் செய்து வருகிறது.. ஆனால், மணிப்பூரை விடப்போவதில்லை என்று காங்கிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் மண்
மொத்தம் 60 தொகுதிகள் இருக்கின்றன.. 31 சீட்டை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது.. அடிப்படையிலேயே இது காங்கிரஸ் மண் என்பார்கள்.. கிட்டத்தட்ட 15 வருடங்கள் காங்கிரஸ் கட்சி தன் பிடியில் வைத்திருந்தது.. இதற்கு மிக முக்கிய காரணம், மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய மூத்த தலைவரான ஒக்ராம் இபோபி சிங் என்பவர்தான்.. இவரால்தான் காங்கிரஸ் அங்கு இத்தனை ஆண்டு காலம் ஆள முடிந்தது.
தனித்து ஆட்சி
கடந்த 2017-ல் பாஜக முந்திக் கொண்டது.. ஆனாலும் பாஜகவால் இங்கு தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை.. அதைதான் இந்த முறை உடைத்தெறிய பாஜக முயன்றுவருகிறது.. பெரும்பான்மையாக வெற்றி பெறும் கணக்கையும் போட்டு வருகிறது.. ஆனால், காங்கிரஸ் கட்சி இப்போதுவரை பலம் குறையாமல் உள்ள நிலையில், பாஜகவால் தனித்து களம் காண்பதும், கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்கும் என்பதும் சாத்தியமா தெரியவில்லை.
தனித்து போட்டி
பாஜகவே தனித்து போட்டி என்றால், காங்கிரஸ் சும்மா விடுமா என்ன? அந்த கட்சியும் தனித்தே களமிறங்க போவதாக தெரிகிறது.. இந்த 5 வருடத்தில் பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் அதிருப்திகளை அறுவடை செய்ய காங்கிரஸ் தரப்பு முயன்று வருகிறது.. அதனால், மணிப்பூரை ஆளப்போவது காங்கிரஸ்தான் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, கடந்த வருடம், 9 எம்எஏக்கள் திடீரென தங்கள் ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவை திணறடித்துவிட்டனர்.. இதையும் தனக்கு சாதகமாக்க காங்கிரஸ் முயன்று கொண்டிருக்கிறது.
கருத்து கணிப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், 5 மாநில தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன.. இதில் 5 மாநிலங்களிலும் பாஜகவே பெரும்பான்மையான வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக 23-27 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 22-26 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஏபிபி - சிவோட்டர் கணித்து கூறியிருந்தது.. அதேபோல, ரிபப்ளிக் டிவி நடத்திய கணிப்பில், பாஜக 31-37 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 13-19 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணித்திருந்தது...
பாஜக முன்னிலை
நியூஸ் 18 நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், மணிப்பூரில் 27 முதல் 32 தொகுதிகளில் வென்று பாஜக முதலிடம் பிடிக்கும் என்றும் காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களை பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.. ஆனாலும், இந்த கணிப்புகளை பொறுத்தவரை, பாஜக பெரும்பான்மையாக இருப்பது போல தெரியவில்லை.. காங்கிரஸ் நூலிழையில்தான் 2வது இடத்தை பெற்றுள்ளால், எப்படியும் இந்த முறை போட்டி மணிப்பூரில் பரபரப்பை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.