மணிப்பூரில் பாஜக ஆட்சி...தப்புமா...இன்று வாக்கெடுப்பு...முழு விவரம்!!
இம்பால்: மணிப்பூரில் பாஜக அரசு ஆட்சி தப்பிக்குமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும். முதல்வர் தனது ஆட்சியின் பலத்தை நிரூபிக்க மணிப்பூர் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கிறது.
கடந்த ஜூன் 17ஆம் தேதி தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர், திரிணமூல் கட்சி எம்.எல்.ஏ ஒருவர், சுயேட்சை எம்.எல்.ஏ., ஒருவர் ஆளும் பாஜக ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டனர். அதேசயம், பாஜகவில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் தங்களது எம்.எல்.ஏ.களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு காங்கிரஸ் அளித்து இருந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்ள மணிப்பூர் சட்டசபை செயலாளர் எம். ரமணி தேவி மறுத்துவிட்டார். அதேசமயம், பாஜக சார்பில் முதல்வர் கொடுத்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மணிப்பூர் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் நின்காமங்பம் புபேந்த மெய்தி கூறுகையில், ''காங்கிரஸ் சார்பில் கொடுத்திருந்த கோரிக்கையை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், பாஜக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த கோரிக்கையை மட்டும் சட்டசபை செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த வாக்கெடுப்பை தோற்கடித்துவிடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஏற்கனவே எங்களது 24 எம்.எல்.ஏ.க்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். 2017ல் மக்கள் அளித்த தீர்ப்பை மீண்டும் நிரூபிப்போம்'' என்றார்.
மணிப்பூர் சட்டசபையின் மொத்தம் பலம் 60. தற்போது 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மூவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நான்கு எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 17ஆம் தேதி ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். மேலும், மூன்று பாஜக எம்.எல்.ஏ.,கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.
முன்பு தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இவர்களிடம் மேகாலயா முதல்வர் மற்றும் பாஜக தலைவர்கள் பேசிய பின்னர் மனம் மாறினார். பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினர். கடந்த ஜூன் 28ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்து இருந்தது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
கடந்த 2017ல் நடந்த தேர்தலில் பாஜக 21 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. தேசிய மக்கள் கட்சி மற்றும் நான்கு நாகா மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ., ஒரு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., ஒரு லோக் ஜன சக்தி கட்சி எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், இந்தக் கட்சியில் இருந்து எட்டு எம்.எல்.ஏ.க்கள் பாஜவில் இணைந்தனர்.