மணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி
இம்பால்: மணிப்பூரில் முதல்வர் பைரோன்சிங் (பிரேன்சிங்- Biren Singh) தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
மணிப்பூர் சட்டசபையில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள். தற்போது சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து 53 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.
கட்சி தாவியதால் சபாநாயகரால் 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 3 பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியையும் ராஜினாமா செய்திருந்தனர்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி...தப்புமா...இன்று வாக்கெடுப்பு...முழு விவரம்!!
சட்டசபை பலம் என்ன?
மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்.எல்.ஏக்களும் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு சபாநாயகரையும் சேர்த்து 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதில் 18 பேர் பாஜக எம்.எல்.ஏக்கள். என்.பி.பி, என்.பி.எப் கட்சிகளின் தலா 4 எம்.எல்.ஏக்கள், திரிணாமுல், லோக்ஜனசக்தியின் தலா 1 எம்.பிக்கள் ஆகியோர் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருகின்றனர்.
மணிப்பூரை உலுக்கிய போதை பொருள் கடத்தல்
அண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் எம்.எல்.ஏக்கள் பரஸ்பரம் கட்சி தாவல் விளையாட்டுகளை அரங்கேற்றினர். இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. இதில் முதல்வர் பைரோன்சிங் பெயரும் பெயரும் அடிபட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி சிபிஐ விசாரணை கோரியது. ஆனால் முதல்வர் பைரோன்சிங் இதனை நிராகரித்தார்.
நம்பிக்கை தீர்மானம்
இதனையடுத்து முதல்வர் பைரோன்சிங் அரசு மீது காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை மணிப்பூர் சட்டசபை செயலாளர் நிராகரித்தார். இதற்கு போட்டியாக மாநில முதல்வர் பைரோன்சிங் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் மணிப்பூர் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
பாஜக அரசு வென்றது
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீரென ஆப்சென்ட் ஆகினர். இதனால் முதல்வர் பைரோன்சிங் எளிதாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பைரோன்சிங்குக்கு ஆதரவாக 28 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன. பைரோன்சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை ஏற்க முடியாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையில் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.