'நாகா' பேச்சு: மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு- அமைச்சர்களுடன் டெல்லியில் மணிப்பூர் முதல்வர் 'டேரா'
மணிப்பூர் மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களுடன் டெல்லியில் மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் முகாமிட்டுள்ளார்.
டெல்லி: நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களது மாநிலத்தின் ஒரு அங்குல நிலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க முடியாது என அமைச்சர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்.
நாகா இன மக்கள் வசிக்கும் மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாமின் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்பது அம்மாநில அரசியல் கட்சிகள், தனிநாடு கோரி வந்த இயக்கங்களின் கோரிக்கை. நாகாலாந்து தனிநாடு கோரிய என்.எஸ்.சி.என் (ஐசக் மூய்வா) அமைப்புடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
ஆனால் மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகியவை தங்களது மாநிலங்களின் எந்த பகுதியையும் நாகாலாந்துடன் இணைக்கவே கூடாது என வலியுறுத்தி வருகின்றன. தற்போது இந்த நாகா அமைதிப் பேச்சுவார்த்தை டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குவதற்கு முன்னதாக நாகா அமைதிப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்து ஒப்பந்தத்தை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் டெல்லியில் தமது அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரநிதிகள் என 30 பேருடன் முகாமிட்டிருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் நாகா இனத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; எங்கள் மாநிலத்தில் இது நாகா இன மக்கள் பகுதி- குக்கிகளின் பகுதி- மைத்தேயி மக்கள் பகுதி என எதுவும் பிரிக்க முடியாது. ஆகையால் மணிப்பூர் மாநிலத்தின் ஒரு அங்குலம் பகுதியையும் கூட நாகாலாந்துடன் இணைக்க அனுமதிக்க முடியாது. அப்படி மத்திய அரசு முடிவெடுத்தால் 2001-ல் சட்டசபை தீ வைத்து எரிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள்தான் நடைபெறும் என்கிறார் பைரேன் சிங். மேலும் எங்கள் எதிர்ப்பை மீறி எதுவும் செய்தால் மத்திய அரசு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பைரேன் சிங்.
இது தொடர்பாக பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் ராம் மாதவையும் பைரேன் சிங் தலைமையிலான குழு சந்தித்து மனு அளித்துள்ளது. மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நாகா அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்.என். ரவி ஆகியோரையும் சந்தித்து தங்களது நிலைப்பாட்டை பைரேன் சிங் தலைமையிலான குழு வலியுறுத்த இருக்கிறது.