நெருக்கடியில் மணிப்பூர் சபாநாயகர்- காங். நம்பிக்கை இல்லா தீர்மானம்- முடிவுகள் எடுக்க ஹைகோர்ட் தடை
இம்பால்: மணிப்பூர் சபாநாயகர் யும்நாம் கெம்சாந்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறது. இன்னொரு பக்கம், 7 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் சபாநாயகர் யும்நாம் கெம்சாந்த் மேற்கொள்ளவும் மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் 24 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் மண்ப்பூரில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவுகிறது.
மணிப்பூரில் 2017 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அரசியல் குழப்பம்தான். தனித்து அதிக இடங்களை காங்கிரஸ் பெற்ற போதும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது.
மணிப்பூரில் பெரும்பான்மையை பறிகொடுத்த பாஜக - ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்
நிலுவையில் வழக்குகள்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக அடுத்தடுத்து வளைத்தது. ஆனால் கட்சி தாவிய எம்.எல்.ஏக்களை சபாநாயகர் யும்நாம் கெம்சாந்த் தகுதி நீக்கமும் செய்யவில்லை. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.
மணிப்பூரில் திருப்பம்
மேலும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் வரை அவர்கள் சட்டசபைக்குள் நுழையவும் கூடாது என்கிற முன்னோடி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக ஆளும் பாஜக அரசுக்கான ஆதரவை அத்தனை சிறு கட்சிகளும் கூண்டோடு விலக்கிக் கொண்டன.
பெரும்பான்மையை இழந்தது பாஜக
இதனால் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி, ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மேலும் தற்போதைய சபாநாயகர் யும்நாம் கெம்சாந்தை நீக்கக் கோரி சட்டசபையில் அவசர தீர்மானத்தையும் கொண்டுவருகிறது காங்கிரஸ். இந்தநிலையில்தான் ராஜ்யசபா தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
நெருக்கடியில் சபாநாயகர்
இச்சூழ்நிலையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் வெள்ளிக்கிழமை வரை எந்த ஒரு முடிவையும் அறிவிக்கக் கூடாது என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால் மணிப்பூர் அரசியலில் பெரும் குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.