இரோம் ஷர்மிளாவை தோற்கடித்து என்ன பலன்? முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இபோபிக்கு ஆளுநர் அறிவுறுத்தல்
தவுபால் தொகுதியில் இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய அம்மாநில ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்பால்: மணிப்பூர் மாநிலம் தவுபால் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவை தோற்கடித்து அம்மாநில முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றி அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உதவவில்லை. இபோபி சிங் உடனடியாக தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மணிப்பூர் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 இடங்களை கைப்பற்றியாக வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. 21 இடங்களை கைப்பற்றி பாஜக 2 வது இடத்தில் இருந்தது.
நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 4 இடங்களும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஆட்சியமைக்க உரிமைகோரி பாஜக
இந்நிலையில் பாரதீய ஜனதா தனக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என கூறி ஆளுநர் நஜ்மா கெப்துல்லாவிடம் ஆட்சியமைக்க உரிமை கூறியுள்ளது. தங்களுக்கு தேசிய மக்கள் கட்சி உட்பட 32 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பாஜக கூறியுள்ளது.
ராஜினாமா செய்ய அறிவுறுத்தல்
இந்நிலையில் அம்மாநில முதல்வர் இபோபி சிங்கை ராஜினாமா செய்யக்கோரி அம்மாநில ஆளுநர் நஜ்மா கெப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இபோபி சிங்கும் உரிமை கோரினார்
"பாஜக உரிமை கோரிய ஒரு மணி நேரத்தில் முதல்வர் இபோபி சிங்கும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரும் தங்களுக்கு தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்.
நீங்கள் கடிதம் கொண்டுவர முடியாது
அக்கட்சியின் செயலாளர் கையெழுத்தை காகிதத்தில் பெற்று வந்தார். தேசிய மக்கள் கட்சியின் சார்பாக நீங்கள் கடிதம் கொண்டுவர முடியாது என அவர்களிடம் கூறினேன்.
பாஜகவும் கடிதம் கொடுத்துள்ளது
ஏனென்றால் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பா.ஜனதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக எனக்கு கடிதம் கிடைத்தது. இதனால் எம்எல்ஏக்களை நேரில் அழைத்து வந்து நிரூபிக்கும்படி கூறியதாக ஆளுநர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்ய அறிவுறுத்தல்
அதேநேரத்தில் இபோபி சிங்கை பதவியை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டதாகவும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இபோபி சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இரோம் ஷர்மிளாவை தோற்கடித்தார்
பதவியை ராஜினாமா செய்யவுள்ள முதல்வர் இபோபி சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட போராளி இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தார். இருப்பினும் இபோபி சிங்கின் வெற்றி அவருக்கு ஆட்சியமைக்க உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.