16 ஆண்டுகால தொடர் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறார் மணிப்பூர் இரோம் சர்மிளா- தேர்தலில் போட்டி!!
இம்பால்: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டு காலம் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசுகள் கண்டுகொள்ளாததால் கைவிடுவதாக அறிவித்துள்ளார் இரோம் சர்மிளா. அத்துடன் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார் இரோம் சர்மிளா.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 42 வயதான அவர் உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மூலம் உயிர் வாழ்ந்து வருகிறார்.
2000-ம் ஆண்டு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் பாதுகாப்பு வழங்கியது.
தொடர் உண்ணாவிரதம்
இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் இரோம் சர்மிளா. அப்போது முதல் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததற்காக அவர் பல முறை கைது செய்யப்பட்டுளார்.
மருத்துவமனையில் அனுமதி
அத்துடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார் .
அடுத்த மாதம் முடிவு
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இரோம் சர்மிளா கூறியதாவது: இவ்வளவு ஆண்டுகளாக போராடியும் அரசு கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதனால் உண்ணாவிரதத்தை அடுத்த மாதம் முடித்துக் கொள்ளப் போகிறேன்.
சட்டசபை தேர்தலில் போட்டி
மேலும் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட உள்ளேன். எனது போராட்டம் தொடரும். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். இவ்வாறு இரோம் சர்மிளா கூறினார்.