காரில் பதுக்கிய கணக்கில் வராத ரூ.4.65 லட்சம் பணம் பறிமுதல்.. பீகார் மாஜி முதல்வர் மகன் கைது
பாட்னா: கணக்கில் வராத பணமாக ரூ.4.65 லட்சம் வைத்திருந்த பீகாரின் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்சியின் மகன் பார்வீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கு அக்டோபர் 12ம் தேதி முதல், நவம்பர் 5ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
போலீசாரும், வருமான வரித்துறையினரும் தீவிர வாகன தணிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வாக்காளர்களுக்கு அளிக்க கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெகனாபாத் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்சியின் மகன் பார்வீன் காரை பரிசோதித்து பார்த்தனர் அதிகாரிகள். உள்ளேயிருந்து ரூ.4.65 லட்சம் ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது. பணத்திற்கு கணக்கு காட்ட முடியாததால் பார்வீன் கைது செய்யப்பட்டார்.