நிலக்கரி ஊழல்: சிபிஐ கோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மன்மோகன் சிங் மனு
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் தனக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதை எதிர்த்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் குறித்து சிபிஐ பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் 2005ம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் உள்ள தலபிரா 2வது நிலக்கரி சுரங்கத்தை பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சுரங்கம் ஒதுக்கப்ட்டபோது நிலக்கரி துறை அமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மன்கோன் சிங்கின் பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மன்மோகன் சிங், பிர்லா குழுமத்தின் குமார மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ அதிகாரிகள் சுபேந்து அமிதாப், பட்டாச்சார்யா, முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி. பாரக் ஆகியோருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த 11ம் தேதி சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து மன்மோகன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று எந்த குற்றச்சாட்டும் இல்லை. அரசு சார்பில் முடிவு எடுப்பதை குற்றம் என்று கூற முடியாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கின் மனு நிராகரிக்கப்பட்டால் அவர் நீதிமன்றப்படி ஏறி கூண்டில் நின்று பதில் அளிக்க வேண்டி இருக்கும்.