அஸ்ஸாம் இன மோதலுக்கு பிரதமர் கண்டனம்! தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மாநில அரசு கோரிக்கை!!
குவஹாத்தி: அஸ்ஸாமில் கோக்ராஜ்கரில் வங்க மொழி பேசும் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜ்கர், பக்சா ஆகிய மாவட்டங்களில் போடோ இன தீவிரவாதிகள் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர். இதுவரை அவர்கள் 32 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். இதையடுத்து கோக்ரஜ்கார், பக்சா, சிராங்க் ஆகிய 3 மாவட்டங்களில் ஊரடங்கு ஊத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலில் ஈடுபடும் தீவிரவாதிகளை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அங்கு அமைதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
மேலும், உள்துறை அமைச்சர் ஷிண்டே, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் ஆகியோரை தொடர்பு கொண்டு, பிரச்சினைக்குரிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இறந்தவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்த பிரதமர், இதுபோன்ற தாக்குதல் மக்களிடையே அச்சத்தை பரப்பும் கோழைத்தனமான முயற்சிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரிக்கை
இதனிடையே இந்த இன மோதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அஸ்ஸாம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.