‘பட்டப் பெயர்’ வைப்பதில் வல்லவராம் மன்மோகன் சிங்... மகள் எழுதிய புத்தகத்தில் ருசிகரம்
டாக்டர் படிப்பு சலித்ததால் பொருளாதாரம் படித்தார், பிரதமரானார்... மன்மோகன் சிங் குறித்து மகள் தகவல்
டெல்லி: டாக்டர் படிப்பு சலித்துப் போய் தான் பொருளாதாரம் படித்தார் மன்மோகன் சிங் என அவரது மகள் தமன் சிங் தனது தந்தை குறித்து எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார் அவரது மகளான தமன் சிங். இந்தப் புத்தகத்தில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால பிரதமர் பதவிக்காலம் தவிர மற்றவை அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.
அதிர்ந்தும் பேசாதவர் என்ற நற்பெயரைப் பெற்ற நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நகைச்சுவையாகப் பேசக் கூடியவர் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்யத் தகவல்களை அப்புத்தகத்தில் கூறியுள்ளார் தமன் சிங்.
இதோ அவற்றிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக...
மருத்துவம் படித்தார்...
உயர்நிலை பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மன்மோகன் சிங், டாக்டருக்கு படிக்க விரும்பி, 1948-ம் ஆண்டில் அதற்கான புகுமுக கல்வியான 'எஃப்.எஸ்.சி.' பயில பஞ்சாப் மாநில தலைநகரான அம்ரிஸ்ட்டரில் உள்ள கல்ஸா கல்லூரியில் சேர்ந்து, மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்துள்ளார்.
பாதியில் வெளியேறினார்...
ஆனால், சில மாதங்களுக்குள்ளாகவே அந்த படிப்பின் மீதான நாட்டம் குறைந்து, அந்த கல்லூரியில் இருந்து வெளியேறி விட்டாராம்.
ஒத்தாசை வேலை...
பின்னர், அவரது தந்தை நடத்தி வந்த கடையில் அவருக்கு ஒத்தாசை செய்யச் சென்ற அவருக்கு தண்ணீர் எடுத்து வருவது, தேனீர் வாங்கி வருவது போன்ற குற்றேவல்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.
பொருளாதாரப் படிப்பு...
இதனால், அந்த கடையில் தந்தைக்கு நிகரான சமஉரிமை தனக்கு இல்லை என்பதை உணர்ந்து அதே ஆண்டில் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரப் பாடத்தை தேர்வு செய்து படித்து, பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பு கற்க சென்றுள்ளார் மன்மோகன் சிங்.
சாக்லேட் சாப்பிட்டு...
கல்விச் செலவுகளை சமாளிக்க மன்மோகன் சிங் பொருளாதார ரீதியாக சிரமப்பட்ட நிகழ்வுகளையும் இந்த நூலில் தமன் சிங் குறிப்பிட்டுள்ளார். அதில், சாப்பாட்டுக்கு அதிகம் செலவாகும் என்பதால், ‘கேட்பரீஸ்' சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு, தனது தந்தை பசியாற்றிக் கொண்ட காலகட்டத்தையும் சுவைபட பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
பட்டப்பெயர்...
தங்களது உறவினர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு ‘பட்டப்பெயர்'களை சூட்டி, அவற்றை ரகசியமாக குறிப்பிட்டு மகிழும் மன்மோகன் சிங்கின் நகைச்சுவை உணர்வையும் இப்புத்தகத்தில் அவர் சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.