'ஆன்லைன்- ஆப்' மூலம் காங். உறுப்பினர் சேர்க்கை- மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்!
டெல்லி: இணையம் மூலமாக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.
பாரதிய ஜனதா கட்சி மிஸ்டு கால் கொடுத்து 8.8 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் அது அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் ஆன்லைன் மற்றும் ஆப் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நேற்று இந்த உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்.
மன்மோகன்சிங் அவரது மனைவி இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் மக்கான் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சமூக வலைதளங்களின் மூலமாக உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்துள்ளனர். ஆன்ட்ராய்டு போன் பயனாளர்கள் ஆப்களை டவுன்லோடு செய்து அதன் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்காக விணப்பப்படிவத்தை நிரப்பலாம்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும். சமூக வலைதளமான ஃபேஸ்புக்கிலும் இந்த விண்ணப்பங்களை இணைத்துள்ளோம். அதனால் இனி காங்கிரஸ் கட்சியில் ஒருவர் இணைவது என்பது மிக எளிதானது.
இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.
அப்போது, பாரதிய ஜனதா கட்சி 8.8 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது குறித்து கேட்டதற்கு, அது மிஸ்டு கால் கட்சி என்று மட்டும் விமர்சித்தார்.