தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைப்பது பிரதமர் பதவிக்கு அழகானதல்ல: மன்மோகன் சிங்
தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைப்பது பிரதமர் பதவிக்கு அழகானதல்ல என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: தரம் தாழ்ந்த விமர்சனங்களை மோடி முன்வைப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டி காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பெங்களூருவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு வங்கிகளில் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2013ம் ஆண்டில் 28,416 கோடி ரூபாயாக இருந்த இந்தத் தொகை, தற்போது 1.1 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டிருக்கிறது.
இந்த ஆட்சியில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்யும் நபர்கள் எளிதில் தண்டனையில் இருந்து தப்பி விடுகிறார்கள். விஜய் மல்லையா, நீரவ் மோடி என பல்வேறு நபர்களின் மீது இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரதமர் மோடி அரசு தவறான பொருளாதார நிர்வாக முறையைக் கையாண்டு வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், இதை எதையும் பற்றி அரசு கவலை கொள்ளவில்லை.
பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளின் மீதும், எதிர்க்கருத்துகள் தெரிவிப்பவரின் மீதும் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். பிரதமர் மோடி பல நேரங்களில் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சிக்கிறார். இது நாட்டிற்கும், பிரதமர் பதவிக்கும் அழகல்ல. பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி பாதுகாக்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தென் இந்தியாவின் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் கவனமாக வாக்களிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.