டெலிகாம் லாபி நலனுக்கு உகந்த வகையில் மன்மோகன்சிங் கடிதம்: ராசா வெளியிட்ட ஷாக்கிங் தகவல்கள்
Recommended Video
டெல்லி: டெலிகாம் நலனுக்கு உகந்த வகையிலான கடிதம் ஒன்றை தனக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பியதாக முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டு புயலை கிளப்பியுள்ளார்.
2ஜி வழக்கில் என்ன நடந்தது என்பதை 15 மாதங்கள் சிறையில் இருந்த போது ஆ. ராசா புத்தகமாக எழுதினார். "2G Saga Unfolds" என்கிற தலைப்பிலான இப்புத்தகம் வரும் 20ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த புத்தகத்தில் பல்வேறு வெளிவராத தகவல்களை ராசா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவறான வழிகாட்டுதல்
புத்தகத்தில் உள்ள சில முக்கிய தகவல்களை பாருங்கள்: மன்மோகன்சிங்கின் ஆலோசகர்கள் அவருக்கு தவறான வழிகாட்டுதல்களை அளித்து் வந்தனர். மன்மோகன்சிங்கின் அமைதி என்பது நாட்டின் கூட்டு மனசாட்சியை அமைதிப்படுத்தும் வழிமுறைதான். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என கூறுவதற்கு சமமானது கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் கருத்து.
வினோத் ராய் மீது பாய்ச்சல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசை வீழ்த்தும் போர் வீரராக துப்பாக்கி ஏந்தி நின்றார் வினோத் ராய். இந்த குழப்பங்களின் சூத்திரதாரி வினோத் ராய். அவரது அறிக்கை குப்பைத் தொட்டியில் வீச தகுதியானது. குறுக்கு விசாரணைக்கு தாக்குப்பிடிக்க முடியாதவை அவை.
சிபிஐ ரெய்டு நடந்ததே தெரியாது
மன்மோகன்சிங்கிற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான, சிபிஐ ரெய்டு பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. 2009ம் ஆண்டு அக்டோபர் 22ல் (சில டெலிகாம் நிறுவனங்கள், டெலிகாம் அமைச்சத்தில் ரெய்டு நடந்தது) இரவு 7 மணியளவில் பிரதமரை தெற்கு பிளாக்கில் சந்தித்தேன். பிரதமரின் அப்போதைய முதன்மை செயலாளர் டி.கே.ஏ நாயர் அப்போது உடனிருந்தார். சிபிஐ ரெய்டு பற்றி நான் பிரதமரிடம் கூறியபோது, அவரே அதை ஆச்சரியத்தோடு கேட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல்.
லாபிகள் நலன்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2ல் நான் டெலிகாம் லாபிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்தேன். அதற்கேற்ற வகையில் அலைக்கற்றை ஏலம் கொள்கையை உருவாக்கிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் பிரதமரிடம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இருந்த அம்சங்கள் லாபிகளின் தொழில் நலனுக்கு உகந்ததாக இருந்தது.
புரியாத புதிர்
இதைப் பார்த்த எனக்கு இது பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம்தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது. பிரதமரை இதுபோன்ற ஒரு கடிதத்தை எனக்கு அனுப்ப எது தூண்டியது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. முழு மரியாதையோடே இதை கூறுகிறேன், பிரமரின் கையெழுத்துடன் அப்படி ஒரு கடிதம் வந்திருக்கவே கூடாது. அந்த கடிதத்தின் வார்த்தைகளால் நான் காயப்பட்டேன்.
சந்தேகத்தோடு பார்த்தார்
பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குடன் பல முறை ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஒருமுறை தனது இருக்கையை அவர் மாற்றிக்கொண்டு அமர்ந்தார். என்னை சந்தேகத்தோடு பார்த்தார். பிரதமர் அலுவலகம்தான் அலைக்கற்றை விவகாரத்தை கண்காணித்து வந்தது. அவர்கள்தான் பிரதமருக்கு தப்பான தகவல்களை அளித்து, இருளிலேயே வைத்துவிட்டனர்.
கூட்டு மனசாட்சி
தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒருமுறை மன்மோகன்சிங் இதுபற்றி கூறுகையில், நாளிதழ்களில் வெளியான 2ஜி அலைக்கற்றை தொடர்பான கட்டுரைகளின் தாக்கம் தனக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார். துரதிருஷ்டவசமாக பிரதமரோ, நிதி அமைச்சரோ, சட்டரீதியில் எனக்கு பாதுகாப்பு அளிக்க முன்வரவில்லை. நாட்டின் கூட்டு மனசாட்சி எனக்கு எதிராக இருந்ததால் அதை அமைதிப்படுத்த மன்மோகன் அமைதி காத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
உற்சாகம் இல்லாமல் இருந்த பிரதமர்
நவம்பர் 14ம் தேதி இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து, டெல்லிக்கு விமானத்தில் நான் வந்தபோது, என்னை ராஜினாமா செய்ய கட்சி தலைவர் அறிவுறுத்தியதாக, டி.ஆர்.பாலு தெரிவித்தார். நான் எனது மோதிலால் நேரு மார்க் இல்லத்திற்கு செல்லும் வழியில், பிரதமரிடம் சந்திக்க நேரம் கேட்டேன். பிரதமர் உற்சாகமில்லாமல் காணப்பட்டார். எனக்கு டீ தரப்பட்டது. நான், ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன்.
சோகத்தில் மன்மோகன்சிங்
அப்போதிருந்த சூழ்நிலை பற்றி என்னிடம் மன்மோகன்சிங் பேசினார். சுப்ரீம் கோர்ட் கூறிய கருத்துக்களையும், தனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதையும் அவர் வருத்தத்தோடு தெரிவித்தார். நான் எனது நிலையை தெளிவாக எடுத்துக் கூறியபோதிலும், பிரதமர் முகத்தில் எந்த மலர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் கண்டனங்களாலா அல்லது, பெரிய அளவில் கோப்புகளில் நடந்த முறைகேடுகளாலா என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. நான் எதையும் யூகிக்கவும் இல்லை. இவ்வாறு ராசா அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.