பிரதமர் மோடியை எச்சரியுங்கள்.. குடியரசு தலைவருக்கு மன்மோகன்சிங் பரபரப்பு கடிதம்
Recommended Video
டெல்லி: பிரதமர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பிற கட்சி தலைவர்களை பற்றி, மோசமான வார்த்தைகளை பேசக்கூடாது என நரேந்திர மோடியை எச்சரிக்குமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் பிற கட்சி தலைவர்கள் பற்றி பொது இடங்களிலும், பிரச்சாரங்களிலும் தரக்குறைவாக பேசுவது சரியல்ல என கர்நாடக தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் கூறியிருந்தார், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.
இருப்பினும், மோடியின் வார்த்தை போர் தொடர்ந்தது. இதனிடையே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு இன்று காங். முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தேவையற்ற, மிரட்டும் வகையிலான, மோசமான வார்த்தை பிரயோகங்களை மோடி மேற்கொள்வதாகவும், அது அவர் வகித்து வரும் பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றது என்றும், மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அரசியல் சாசனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள குடியரசு தலைவர், பிரதமருக்கு எச்சரிக்கை செய்யுமாறு மன்மோகன்சிங் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி வேறு எந்த கட்சித் தலைவர்களையும் மிரட்டும் தொனியில் பேசக்கூடாது என்றும், காங்கிரஸ் கட்சி மிகவும் பழமைவாய்ந்த கட்சி, இதுபோல பல மிரட்டல்கள், சவால்களை சந்தித்து வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமை அதை பயமின்றி எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியோ, அதன் தலைவர்களோ, இந்த மிரட்டல்களுக்கு பயப்படும் கோழைகள் இல்லை.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இக்கடிதத்தில் லோக்சபா எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சீனியர் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.