ஹரியானா: ஆட்சியமைக்க உரிமை கோரியது பாஜக.. கட்டார் முதல்வர், துஷ்யந்த் துணை முதல்வர்! நாளை பதவியேற்பு
Recommended Video
சண்டீகர்: ஹரியானா சட்டசபை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராக மனோகர் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்கிறார்.
ஹரியானா மாநில சட்டசபைக்கு கடந்த 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஹரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது. சண்டீகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கெஸ்ட் அவுஸில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
நிர்மலாதேவி ரகளை.. பொருட்களை தெருவில் வீசி.. கதவை பூட்டிக் கொண்டதால் பரபரப்பு!
இதில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பாஜக மூத்த தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான அருண் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹரியானாவில் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை சட்டசபை பாஜக எம்எல்ஏக்களின் குழு தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாஜகவும், ஜனநாயக ஜனதா கட்சியும் ஆளுநர் சத்யதியோ நாராயண் ஆர்யாவை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதனால் முதல்வராக 2-ஆவது முறையாக மனோகர் லால் கட்டாரும் துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் நாளை மதியம் 2.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். அமைச்சரவையில் யார் யார் என்பது குறித்தும் நாளை அறிவிக்கப்படும்.