சியாச்சினில் இருந்து ராணுவத்தினரை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: மனோகர் பாரிக்கர்
விசாகப்பட்டினம்: சியாச்சின் பனிச்சிகரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது மட்டுமே வீரர்களின் உயிரிழப்பு விவகாரத்திற்கு தீர்வாகாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
சியாச்சினில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. ஆனால், வீரர்களை சியாச்சினில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற பரிந்துரைகள் முறையாக ஆராயாமல் வழங்கப்பட்டுள்ளண.
சியாச்சினில் வீரர்களைப் பணியில் ஈடுபடுத்துவதென்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. அந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளோம். எனினும், கடந்த சில ஆண்டுகளாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
பனிச்சரிவு என்பது கணிக்க முடியாத இயற்கை நிகழ்வாகும். இதற்கு முன்னேற்பாடாக எதுவும் செய்திருக்க முடியாது. பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள் மீது பல டன்கள் பனி மூடியிருக்கும். அவர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.