இந்தியா தயாரித்த தேஜாஸ் விமானம் மார்ச்சில் விமானப் படையிடம் ஒப்படைப்பு
பெங்களூர்: இந்தியாவே தயாரித்துள்ள இலகுரக போர் விமானமான தேஜாஸ் எஸ்பி-1 வரும் மார்ச் மாதம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பலமுறை இந்த விமானம் ஒப்படைக்கப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டபோதிலும் தற்போது தேதியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். எஸ்பி-1 விமானம் இறுதி ஆபரேஷனல் கிளியரன்ஸுக்காக காத்துள்ளது.
தேஜாஸ் விமானத்திற்கு முதல்கட்ட ஆபரேஷனல் கிளியரன்ஸ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி அளிக்கப்பட்டது. கிளியரன்ஸ் கிடைக்கப்பட்ட பிறகு எஸ்பி-1 தேஜாஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதன்முதலாக விண்ணில் பறந்தது. இந்நிலையில் இந்த விமானம் வரும் மார்ச் மாதம் இந்திய விமானப்படையிடம் அளிக்கப்படும் என்று பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில் இருந்து புதிய தேஜாஸ் எஸ்பி-1 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது விமானம் அதாவது எஸ்பி-2 மார்ச் மாதம் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள தயாராகிவிடும் என்றும், முதல் 20 விமானங்கள் 2017-2018ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என்றும் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இறுதி கிளியரன்ஸ் ஒத்திவைப்பு
இறுதி அதாவது பைனல் ஆபரேஷனல் கிளியரன்ஸ்(எப்.ஓ.சி.) டிசம்பர் மாதம் தான் கிடைக்கும். இது குறித்து டிஆர்டிஓ தலைவர் டாக்டர் அவினாஷ் சந்தர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
தேஜாஸ் எப்.ஓ.சி.க்கான அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. எப்.ஓ.சி. பெறத் தேவையான சோதனைகள் தற்போது நடந்து வருகிறது. அக்னி 5 ஏவுகணையின் மூன்றாவது பரிசோதனை இந்த மாதம் நடைபெறாது. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் நடைபெறும். 1000 கிலோ கிளைட் குண்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. கனரக குண்டுகளை வடிவமைத்து, தயாரித்து, பயன்படுத்த இந்தியாவுக்கு திறன் உள்ளது என்றார்.
டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல்(ஏரோ) டாக்டர் கே. தமிழ்மணி ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
தேஜாஸின் பலவவகை விமானங்கள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது இத்திட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி ஆகும். எப்.ஓ.சி. தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஏனென்றால் விமானத்திற்கு தேவையான மேலும் சில பாகங்கள் வர வேண்டி உள்ளது. அவை வர தாமதம் ஆகியுள்ளது என்றார்.
தயாரிப்பு
ஹெச்.ஏ.எல். தலைவர் டாக்டர் ஆர்.கே. தியாகி கூறுகையில்,
விரைவில் தேஜாஸ் சீரிஸ் விமான தயாரிப்பை அதிகரிக்க உள்ளோம். இது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விமானப்படைக்கான தேஜாஸ் விமானத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.