சுயேச்சைகளை வளைத்தது பாஜக.. கோவாவில் ஆட்சியமைக்கிறது.. முதல்வராகிறார் பாரிக்கர்
கோவாவில் ஆட்சி அமைக்க மனோகர் பாரிக்கர் ஆளுநரிடம் உரிமை கோரினார். கோவா சட்டசபை தேர்தலில் 13 இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான பலத்தை சுயேச்சைகளிடமிருந்து பாஜக பெற்றுள்ளது.
பனாஜி: கோவாவிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. அங்கு 2வது இடத்தை அது பெற்றிருந்தாலம் கூட சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கிறது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அதே வேளையில், கோவாவில் பாஜக முதல்வராக இருந்த லட்சுமிகாந்த் பர்சேகர் மட்டுமின்றி அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கிய அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர்.
இந்த நிலையில் சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 பேரின் ஆதரவை பெற்றுள்ளது பாஜக. இதையடுத்து மாநில ஆளுநர் மிருதுருஷா ஷாவை சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் தான் அரசமைக்க போவதாக ஆளுநரிடம் தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனக்கு ஆதரவாக உள்ள 22 எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் அளித்தார்.
உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து கோவாவிலும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே பாணியை அது மணிப்பூரிலும் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.